மத்திய கிழக்கில் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிற்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு (foreign exchange reserves) 9 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது பொருளாதாரத்தில் நாட்டின் வலிமையைக் குறிக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 9.063 பில்லியன் டாலர் அளவுக்கு குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், மொத்த கையிருப்பு 697.121 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 10.288 பில்லியன் டாலர்:
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த வாரம் (மார்ச் 27) அந்நிய செலாவணி கையிருப்பு 10.288 பில்லியன் டாலர் குறைந்து 688.058 பில்லியன் டாலராக இருந்தது. பிப்ரவரி 27 அன்று இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 728.494 பில்லியன் டாலர் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக தொடர்ச்சியாக பல வாரங்களுக்கு கையிருப்பு குறைந்தது.
கையிருப்பு நிலவரம்:
அந்நியச் செலாவணி சொத்துக்கள் 1.784 பில்லியன் டாலர் அதிகரித்து 552.856 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
தங்கக் கையிருப்பு மிகப்பெரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. தங்கக் கையிருப்பு 7.221 பில்லியன் டாலர் அதிகரித்து 120.742 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கையிருப்பு நிலை 4.816 பில்லியன் டாலராக நிலையாக உள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை:
மேற்கு ஆசிய நெருக்கடி தொடங்கிய பிறகு ரூபாய் மதிப்பு அழுத்தத்திற்கு உள்ளானது. ரிசர்வ் வங்கி, டாலர்களை விற்பனை செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டதுடன், ரூபாயின் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த பல கொள்கை நடவடிக்கைகளையும் எடுத்தது. இந்த வாரத்தில் கையிருப்பில் ஏற்பட்ட வலுவான அதிகரிப்பு, ரூபாயின் நிலைத்தன்மையையும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்முயற்சியான தலையீட்டையும் பிரதிபலிக்கிறது.
