அமலாக்கத் துறை வழக்கை எதிர்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. high court order notice to senthil balaji
தமிழகத்தில் 2021- 23ம் ஆண்டுகளுக்கு இடையில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய 1,182.88 கோடி ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டரில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது.
அதில், ‘இந்த டெண்டரை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்களை லாபடைய செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளன. இதனால் உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுகொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (ஜூன் 13) நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அறப்போர் இயக்கம் சார்பில், “இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை” என்று வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி வேல்முருகன் செந்தில் பாலாஜியும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். high court order notice to senthil balaji