ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சியினர் புறக்கணித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்ளவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் அல்லது சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கப்படுவது வழக்கம். இதற்கு முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார்.
இந்த ஆண்டு இன்று (ஜனவரி 26) ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுகிறது.
இந்த விருந்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் செல்லவில்லை. அதேசமயம் தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
எதிர்க்கட்சியை பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின் ஆகியோர் வருகைத் தந்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார்.
தற்போது எடப்பாடி பழனிசாமி கோவை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
