“என்னப்பா இதுக்கு போய் அப்செட் ஆகுற?” – இந்த வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பலமுறை கேட்டிருக்கலாம், அல்லது உங்கள் துணையை பார்த்து நீங்களே கேட்டிருக்கலாம். சின்ன சின்ன விஷயங்களுக்கும் கண்கள் கலங்குவது, அடுத்தவர் கஷ்டத்தைப் பார்த்தால் துடிப்பது, ஒரு சின்ன வார்த்தை தடிப்பாக விழுந்தாலும் நாள் முழுக்க அதைப் பற்றி யோசிப்பது… இவர்களைத்தான் நாம் ‘எமோஷனல்’ அல்லது ‘சென்சிடிவ்’ என்று முத்திரை குத்துகிறோம்.
ஆனால், இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களில் உலவும் ‘Tough personality’ பிம்பங்களுக்கு மத்தியில், உண்மையில் ஒரு சென்சிடிவ் பார்ட்னர் கிடைப்பது மிகப்பெரிய வரம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஏன் காதலில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு அலசல் இது.
வார்த்தை தேவையில்லாத புரிதல்
உணர்ச்சிவசப்படும் மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட், அவர்களின் ‘கவனிக்கும் திறன்’. நீங்கள் “எனக்கு ஒன்னும் இல்ல, நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று சொன்னாலும், உங்கள் கண்களின் ஓரத்தில் இருக்கும் சோர்வையோ, உங்கள் குரலில் இருக்கும் நடுக்கத்தையோ அவர்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.
நீங்கள் சொல்லாமலேயே உங்கள் மனநிலையைப் புரிந்துகொண்டு, உங்களுக்குப் பிடித்த ஒரு டீ, காபியைப் போட்டுக் கொடுப்பதோ அல்லது அமைதியாக உங்கள் கைகளைப் பிடித்துக் கொள்வதோ அவர்களுக்கு கைவந்த கலை. எமோஷனலி சென்சிடிவ் மனிதர்கள் வெறும் காதலர்களாக மட்டுமல்லாமல், உங்கள் மனதைப் படிக்கும் நிழலாகவும் இருப்பார்கள்.
சின்ன சின்ன விஷயங்களில் ஒளிந்திருக்கும் பேரன்பு
பெரிய பரிசுகளை விட, சரியான நேரத்தில் காட்டப்படும் அக்கறைதான் காதலைத் தக்கவைக்கும். நீங்கள் தற்செயலாக ஒருமுறை சொன்ன ஆசையை நினைவில் வைத்து, “உனக்கு இந்தப் பாட்டு பிடிக்குமே!” என்றோ, “தலைவலி வரும்போது உனக்கு இதுதான் காரணமாக இருக்குமே!” என்றோ ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் அவர்கள் செதுக்கிச் செதுக்கிச் செய்வார்கள். அவர்களின் அன்பு என்பது ஆர்ப்பாட்டமானது அல்ல, அது ஆழமானது.
பாதுகாப்பான புகலிடம்
வாழ்க்கை எப்போதும் சீராக இருப்பதில்லை. அலுவலகப் பிரச்சனை, குடும்பச் சிக்கல் என நீங்கள் துவண்டு போகும் தருணங்களில், ஒரு சென்சிடிவ் பார்ட்னர் உங்களுக்கு ‘Safe Space’ ஆக இருப்பார். அவர்கள் உங்களை “ஏன் இப்படி இருக்க?” என்று நியாயம் கேட்க மாட்டார்கள். மாறாக, “பரவாயில்லை, நான் இருக்கேன்” என்று உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள்.
மற்றவர்கள் ‘பலவீனம்’ என்று கருதும் இவர்களின் அந்த மென்மையான குணம்தான், நெருக்கடியான நேரங்களில் உங்களை மீட்டுக்கொண்டு வரும் மிகப்பெரிய சக்தியாக மாறும்.
சவால்களைக் கடந்த அன்பு
ஒரு சென்சிடிவ் பார்ட்னர் காட்டும் அன்பின் அடர்த்திக்கு முன்னால் அந்தச் சின்னச் சின்ன வருத்தங்கள் ஒன்றுமே இல்லை. அப்படி ஒரு சென்சிடிவ் பார்ட்னர் உங்கள் வாழ்க்கையில் இருந்தால், அவர்களைக் கொண்டாடுங்கள். ஏனென்றால், கல்லாய் இருக்கும் உலகில் ஈரப்பதம் மாறாத இதயத்தைக் கொண்டிருப்பது ஒரு அற்புதம். அவர்கள் எமோஷனலாக இருப்பது பலவீனம் அல்ல, அவர்கள் மற்றவர்களுக்காகத் துடிக்கும் இதயம் கொண்டவர்கள் என்பதன் அடையாளம்!
