நான் வெளியூர்க்காரன் இல்லை, நானும் மதுரைக்காரன் தான். இங்கே வீடு பார்த்துவிட்டேன் என நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி தெரிவித்துள்ளார்
தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு அதிமுக தரப்பில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சுந்தர் சி இன்று (ஏப்ரல் 4) தனது மனைவி குஷ்பூ உடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி, “மதுரை மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது வெற்றி நிச்சயம் என்று உறுதியாகிவிட்டது. மதுரை மத்திய தொகுதி மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். அவர் மேலும் கூறியதாவது:
“பத்து வருடமாக ஒரே எம்எல்ஏ எந்த நலத்திட்டங்களையும் செய்யாமல் உள்ளார். இதைத்தான் மக்கள் நிறைவேற்றுமாறு கேட்கிறார்கள்.
மதுரை மாநகரை எவ்வளவு முன்னேற்ற முடியுமோ அவ்வளவு முன்னேற்ற வேண்டும். எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல் நிலவுகிறது. எல்லா குறைகளையும் களைந்து மதுரையை நம்பர் ஒன் சிட்டியாக மாற்ற வேண்டும். தமிழனின் தலைநகரம் மதுரை.
நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் யார் வேண்டுமானாலும் நிற்கலாம். நல்லது செய்ய மனதில் இருந்தால் போதும். மதுரை மக்கள் எனக்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.நான் வெளியூர்க்காரன் இல்லை, நானும் மதுரைக்காரன் தான். இங்கே வீடு பார்த்துவிட்டேன். இனி மாதத்தில் 15 நாட்கள் இங்கேயே தங்கியிருப்பேன்” என்று தெரிவித்தார்.
