வைஃபை ஆன் செய்ததும், “ஒரு லீகல் நோட்டீஸ் மூலம் ஒட்டுமொத்த இந்திய மீடியாவே பரபரப்பாகிவிட்டதே” என பேசியபடியே மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
தமிழக முதல்வராக கலைஞர் இருந்த போது அரசு விழா ஒன்றில் பேசுகையில், “என்னுடைய மனசாட்சி முரசொலி மாறன்” என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவராக திகழ்ந்தவர் முரசொலி மாறன்.

முரசொலி மாறனின் மனைவி மல்லிகா அம்மாள். மகன்கள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன்; மகள் அன்புக்கரசி.
சன் டிவி குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனுக்கு அவரது தம்பி தயாநிதி மாறன் அனுப்பிய லீகல் நோட்டீஸ், இப்போது பெரிய அளவில் பரபரப்பான விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது. இந்த லீகல் நோட்டீஸால் வட இந்தியா ஊடகங்கள் அனைத்தும் கலாநிதி மாறனை குறிவைத்துக் கொண்டிருக்கின்றன.
இதற்கு காரணம், தமிழ்நாட்டில் இருந்து மிகப் பெரிய டிவி நெட்வொர்க் சாம்ராஜ்யத்தையே நிறுவியவர் கலாநிதி மாறன்; கலாநிதி மாறனின் இந்த சாம்ராஜ்யம்தான் வட இந்திய ஊடகப் பெருநிறுவனங்கள், தமிழ்நாட்டில் இப்போதும் நுழையவும் காலூன்றவும் தடையாக இருக்கின்றன. கலாநிதி மாறனை குறிவைத்து மீடியாக்கள் விவாதங்களை நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணம்.

கலாநிதி மாறனுக்கு எதிராக தயாநிதி மாறன் அனுப்பிய லீகல் நோட்டீஸில் கூறப்பட்டுள்ள பங்கு, பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகள், சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என அனைத்துமே இந்த விவகாரத்தில் உள்ளே நுழையக் கூடிய சாத்தியத்தை உருவாக்கி இருக்கின்றன.
சரி.. கலாநிதி மாறன் மீது தயாநிதி மாறனுக்கு ஏன் இவ்வளவு பெரும் கோபம்?
பொதுவாக கலைஞர் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் அனைவரும் உட்கார்ந்து பேசி முடிவு எடுக்கப்படுவது வழக்கம். மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தை அழகிரி ஆதரவாளர்கள் எரித்ததால் பிரச்சனை பெரிதாகி குடும்பத்தில் பிளவு ஏற்பட்டது.
இதனையடுத்து தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்த பிளவை தொடர்ந்து பெரிதாக்காமல், அழகிரி, கலாநிதி – தயாநிதி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துப் பேசினார் கலைஞர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என கூறி அனைவரையும் ஒன்று சேர்த்தார் கலைஞர்.

இப்போது திடீர் என தயாநிதி மாறன் பிரச்சனையை கிளப்ப என்னதான் காரணம்? முரசொலி மாறன் குடும்பத்தில் அவர் மறைவுக்குப் பின்னர் முரசொலி செல்வம்தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார். முரசொலி மாறன் மறைந்த போது, அவர் இடத்துக்கு அதாவது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அவரது சகோதரர் முரசொலி செல்வத்தைத்தான் முதலில் போட்டியிட சொன்னார் கலைஞர் .
ஆனால் முரசொலி செல்வமோ, இதனை மறுத்து, “நேரடி அரசியல் வேண்டாம்.. பின்னால் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்” என கூறிவிட்டார். இதனால் கலாநிதி மாறனை மத்திய சென்னையில் நிற்க சொன்னார் கலைஞர். கலாநிதியும் தமக்கான வாய்ப்பை மறுத்ததுடன் தம்பி தயாநிதியை நிறுத்தலாம் என சொன்னார். அந்த தம்பி தயாநிதிதான் அண்ணன் கலாநிதி மாறனுக்கு எதிராக இப்போது லீகல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் போட்டியிட்டு வென்றார். அப்போது மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக செல்வாக்குடன் இருந்தார். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று மத்திய ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2004, 2009, 2019, 2024 என 4-வது முறையாக மத்திய சென்னை தொகுதியின் எம்பியாக இருக்கிறார் தயாநிதி மாறன்.

முரசொலி செல்வம் உயிருடன் இருந்திருந்தால் கலாநிதிக்கும் தயாநிதிக்கும் இடையே சமாதானம் செய்து வைத்திருப்பார். அந்த சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது. கலாநிதி மாறனுக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக எந்த பேச்சுவார்த்தையுமே இல்லையாம்.
தயாநிதி மாறன் தமக்கு மிக நெருக்கமானவர்களிடம் “சன் டிவி நிறுவனத்தின் அனைத்து பங்குகளையுமே கலாநிதி மாறன் தமக்கே மாற்றிக் கொண்டார். எனக்கு எதுவுமே தரவில்லை” என குமுறி இருக்கிறார். அத்துடன், “கலாநிதி மாறன் தமக்கு எந்த முக்கியத்துவமும் தருவது இல்லை” எனவும் வேதனைப்பட்டிருக்கிறார்.
சென்னை போட் கிளப் பகுதியில்தான் கலாநிதி, தயாநிதியின் பிரம்மாண்ட பங்களாக்கள் அருகருகே இருக்கின்றன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இரண் டு வீட்டைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது கூட இல்லை என்கிற நிலைதான். முரசொலி மாறன் மனைவி மல்லிகா அம்மாள், தயாநிதி மாறன் வீட்டில்தான் இருக்கிறார்.

இப்படி பிரச்சனை நீடித்த நிலையில் திமுக மற்றும் குடும்பத்தின் தலைவரான முதல்வர் ஸ்டாலின், கடந்த காலங்களில் கலைஞர் என்ன அணுகுமுறையை பின்பற்றுவாரோ அதே பாணியில் தலையிட்டு கலாநிதி, தயாநிதி மாறன் இருவரிடமும் பேசினாராம். இருவருக்கும் இடையே இணக்கமான நிலையை உருவாக்கும் வகையில் முதல்வர் பேசினாராம்.
முதல்வர் ஸ்டாலின் தலையிட்ட இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலாநிதி மாறன், ஒரு தொகையைக் குறிப்பிட்டு இதனை தயாநிதிக்கு தருகிறேன் என சொல்லி இருக்கிறார். ஆனால் தயாநிதியோ, சன் டிவியின் மதிப்புகளை ரொம்ப குறைவாகவே சொல்கிறார் கலாநிதி என ஏற்க மறுத்துவிட்டாராம்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கலாநிதியிடம் பேசிய நிலையில், அவரும் சற்று இறங்கி வந்தாராம். இதனையும் தயாநிதி ஏற்க முன்வராத நிலையில் , “குடும்ப பிரச்சனையை பெரிசாக்கிட வேண்டாம்.. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவும் வேண்டாம்” எனவும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம். ஆனாலும் தயாநிதி மாறன் அதனை பொருட்படுத்தாமல், கலாநிதி மாறனுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்ப இப்போது விவகாரம் பெரிதாகிவிட்டது.

கலாநிதி மாறனுக்கு எதிராக தயாநிதி மாறன் அனுப்பிய லீகல் நோட்டீஸில் கடுமையான மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தயாநிதி மாறன், மத்தியில் ஆளும் பாஜக அரசின் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுதான் இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாரோ என்கிற சந்தேகப் பார்வையும் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை உள்ளே நுழைவதற்கு முன்னரே முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதுதான் கலைஞர் குடும்பத்தின் நலன் விரும்பிகளின் எதிபார்ப்பு என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டது வாட்ஸ் அப்.