டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறதா? மா. சு. விளக்கம்!

Published On:

| By Minnambalam Login1

dengue tamilnadu preventive measures

கடந்த பத்தாண்டுகளில் இந்தாண்டு தான் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (நவம்பர் 9) தெரிவித்துள்ளார்.

பொதுவாகத் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

இந்தாண்டும் தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனால் சிலர் உயிரிழக்கவும் செய்தனர்.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 9) சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் “கடந்த பத்தாண்டுகளில் இந்தாண்டு தான் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

2012 ஆண்டு 66 நபர்களும், 2017 ஆண்டு 65 நபர்களும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்கள். ஆனால் இந்தாண்டு தொடக்கம் முதல் இன்றுவரை டெங்குவால் 8 நபர்கள் தான் இறந்துள்ளார்கள். இந்தாண்டு டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது” என்று கூறினார்.

இன்றுவரை 20,138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு!

இதற்கிடையில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்தும் விதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் டெங்குகாய்ச்சல் பரவுவதைத் தடுக்க கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஜனவரி 2024 முதல் நவம்பர் 5 வரை, தமிழ்நாட்டில் 20,138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது, பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவச் சிகிச்சை பெற மருத்துவமனையை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்தனர். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணமும் அடங்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் “அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன, 4,031 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நோய் கண்காணிப்பு அறிக்கைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் அதிவிரைவு குழுக்களை வழிநடத்துகின்றனர், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் டெங்கு தடுப்புக்காகத் தினமும் 25,000 DBC பணியாளர்கள் ஈடுபடுத்தப் படுத்தப்பட்டுள்ளனர்” உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

குரூப் 2, 2A கூடுதல் காலி பணியிடங்கள்… மாணவர்கள் மகிழ்ச்சி!

சம்பந்தமே இல்லாமல் ஒரு மனிதனை பார்த்து கோபம் வருகிறதா? வீடியோ வெளியிட்ட அஜித்தை பாராட்டிய சத்யராஜ்

மறைந்த கோவை செல்வராஜின் உடலுக்கு செந்தில் பாலாஜி அஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share