சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முன்னாள் போலீசார் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று (ஏப்ரல் 6) தண்டனை விவரத்தை அறிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு பொது முடக்கத்தின் போது, காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.
இதில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனை விவரம் மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில், அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது சிபிஐ சார்பில் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கேட்கப்பட்டது.
இதனால் வழக்கு ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி வழக்கு ஏப்ரல் 2 அன்று வந்த போது சிபிஐ சார்பிலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் சார்பிலும் குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
குற்றவாளிகள் சார்பில் ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இரண்டு தரப்பு வாதத்தையும் தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி இன்று தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி முத்துக்குமரன்,
இது சாதாரண வழக்கு அல்ல… சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் 9 பேருக்கும் உட்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது என அறிவித்தார்.
