கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காததால், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவில்பத்து மணவெளி பகுதியைச் சேர்ந்த லெஃப்ட் என்கிற பிரவீன் ராஜ் அருகில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் (டிஎன்சிஎஸ்சி) குடோனில் சுமைதூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்.

இவர் மீது கஞ்சா, திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. இவரை எளிதில் பிடிக்க முடியாது. போலீஸ் பிடித்துவிடுவார்கள் என்று தண்ணீர் தொட்டி மேல் தான் இரவு படுத்து தூங்குவார். அப்படி யாராவது பிடிக்க வந்தால், தண்ணீர் தொட்டியில் இருந்து குதித்துவிடுவார். எப்போதும் தன்னிடம் பிளேடு வைத்திருப்பார். போலீஸ் பிடிக்க வந்தால், அவரை பிளேடால் கிழித்துக்கொள்வார்.
2023-ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் பிரவீன் ராஜை கைது செய்ய மாணிக்கராஜ் எஸ்.ஐ இரவு நேரத்தில் சென்றார். தண்ணீர் தொட்டி மீது ஏறிய எஸ்.ஐ, லெஃப்டை கீழே இறங்க சொன்னார்.
படிக்கட்டு வழியாக கீழே வரும்போது பாதிவழியில் தப்பித்து ஓடிவிட்டார் லெஃப்ட். இப்படி போலீசுக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்த இவரை, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், லெஃப்டை பிடிக்க சொல்லி காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ்.ஐ அன்பழகனுக்கு கஞ்சா மெமோ அனுப்பியிருந்தார்.
இந்தநிலையில் தான் கடந்த ஜூன் 8-ஆம் தேதி மதியம் 12 மணியளவில் டிஎன்சிசி குடோன் அருகில் செந்தில் குமார், மணிகண்டன், சிவராஜ் ஆகிய மூவரும் பிரவீன் ராஜிடம் கஞ்சா வாங்க சென்றனர்.
அப்போது, நான் கஞ்சா விற்பதில்லை என்று தெரிவித்துள்ளார் லெஃப்ட். இதனால் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டது. உடனே செந்தில் குமார், மணிகண்டன், சிவராஜ் ஆகியோரை பிளேடால் கன்னம், கழுத்து, மார்பு பகுதியில் கிழித்துவிட்டார். இந்த மூவரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள்.
அடிபட்ட மூவரும் ரத்த காயத்துடன் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்று புறநோயாளியாக சிகிச்சை பெற்றனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் புகார் கொடுத்தனர். அவர் அந்த புகாரை பெற்று, இடதுபக்க டிராவில் போட்டுவிட்டார்.

மறுநாள் திங்கட்கிழமை காலையில் 11 மணிக்கு வந்த இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் மாரிமுத்துவிடம் புகாரை கொடுத்து விசாரிக்க சொன்னார். அவர் அந்த புகாரை பெற்றுக்கொண்டு புகார் கொடுத்த சிவராஜை போன் செய்து காவல்நிலையத்திற்கு வர சொன்னார்.
“இந்த புகாரில் லெஃப்ட்னு குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவனுடைய உண்மையான பெயர், பெற்றோர் பெயரை சரியாக குறிப்பிட்டு புகாரை மாற்றி எழுதிக்கொடு” என்று சொல்லிவிட்டு கொடுத்த புகாரை அவர்களிடமே திருப்பி கொடுத்துவிட்டார்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில், காவல்நிலையத்திற்கு வெளியில் புகாரை கிழித்துபோட்டனர். இந்தநிலையில், தான் ஜூன் 11-ஆம் தேதி இவர்கள் லெஃப்ட்டை கொலை செய்துவிட்டனர்” என்கிறார்கள்.
லெஃப்ட் கொலை செய்தது குறித்து செந்தில் குமார், மணிகண்டன், சிவராஜ் மூவரும் கொடுத்த வாக்குமூலத்தில், “ஜூன் 11-ஆம் தேதி காட்டுமன்னார் கோவில் அருகில் தெற்கு இருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கிற்கு மூன்று பேரும் சென்றோம்.
அந்த டாஸ்மாக்கில் லெஃப்ட் மது அருந்தி கொண்டிருந்தான். நாங்கள் அவனை பார்த்து முறைத்தோம். தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வாங்கடா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
லெஃப்ட் இருக்கும் தெருவில் வசிக்கும் சக்திவேல், செந்தில் குமாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக இரண்டு பைக்கில் அந்த பகுதிக்கு நாங்கள் ஆறு பேர் சென்றோம்.
செந்தில் குமார் லெஃப்டின் தலையின் பின்னால் வெட்டினான். அவன் விழுந்தவுடன் எழுந்து ஓடாத அளவிற்கு மணிகண்டன் இரண்டு கால்களிலும் வெட்டினான். லெஃப்ட் உயிர் பிரிந்ததும் அங்கிருந்து தப்பித்துவிட்டோம்” என்றனர்.
இந்த கொலை குறித்து எஸ்.பி.ஜெயக்குமார், காட்டுமன்னார் கோவில் காவல்நிலைய தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜாவிடம் கேட்டறிந்தார்.
ராஜா, ‘இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை காப்பாற்ற லெஃப்ட் மீது நடவடிக்கை எடுக்க சிவராஜ் கொடுத்த புகாரை எஸ்.ஐ அன்பழகன் தான் வாங்கினார். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற கொலை நடந்திருக்காது’ என்று ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார்.
இதுதொடர்பாக எஸ்.ஐ அன்பழகனிடம், எஸ்.பி விசாரித்தார். அப்போது அன்பழகன், “நான் சனிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் நிலைய பணியாக சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டிற்கு வந்தேன்.
அதனால் காவல்நிலையத்திற்கு செல்லவில்லை. திங்கள்கிழமை எனது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க வருவதால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டேன். புகார் கொடுத்ததும் சம்பவம் நடந்ததும் எனக்கு தெரியாது” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தனி ரிப்போர்ட் கேட்டு, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிப்பிரிவு எஸ்.ஐ ராஜா ஆகிய மூவரையும் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவு போட்டார் ஐ.ஜி.அஸ்ரா கார்க்.
புகாரை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்று கொலை நடந்திருக்காது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். cuddalore left praveen murder what is the background