மேகலாயாவிற்கு தேனிலவு சென்றபோது கணவரை கொன்ற வழக்கில் மனைவி, அவரது காதலர் மற்றும் கூட்டாளிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள், மேகலாயாவின் அண்டை மாநிலமான திரிபுராவில் நடந்த முக்கோண காதல் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Love Triangle Murder at Tripura gets shockwave
திரிபுரா மாநிலம் அகர்தலாவின் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷ்ரிஃபுல் இஸ்லாம் (வயது 24). இவர் அகர்தலா ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 8ஆம் தேதி முதல் காணமால் போனதாக அகர்தலா காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திரிபுரா தலைநகரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள தலாய் மாவட்டத்தின் கண்டசெராவில் உள்ள கடையின் ஐஸ்கிரீம் ஃப்ரீசரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டிராலி சூட்கேஸில் அவரது உடலை போலீசார் நேற்று (ஜூன் 11) கண்டறிந்தனர்.
அந்த கடையின் உரிமையாளர் யார் என்று போலீசார் நடத்திய விசாரணையில், அது மருத்துவர் தீபக்கர் என்பவரின் பெற்றோருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதன் அடிப்படையில் மருத்துவர் மற்றும் அவரது பெற்றோர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணைக்கு பிறகு எஸ்பி கிரண் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “இந்த கொலையை வங்காளதேசத்தில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர் தீபக்கர் சாஹா (29) தனது கூட்டாளிகளுடன் இணைந்து செய்துள்ளார்.
கொலையான ஷரிஃபுல் மருத்துவர் தீபக்கரின் உறவுக்காரப் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அதே பெண்ணை தீபக்கும் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் ஷரிஃபுல் மீது ஆத்திர கொண்ட தீபக்கர், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 8ஆம் தேதி மாலையில் தெற்கு இந்திராநகர் கபர்கலா பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு வருமாறு ஷரிஃபுலை தீபக்கர் அழைத்தார்.
அதனை ஏற்று ஷரிஃபுலும் இரவு 9.30 மணியளவில் அந்த வீட்டிக்கு சென்ற நிலையில், தீபக்கர் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளான அனிமேஷ் யாதவ் (21), நபானித் தாஸ் (25) மற்றும் ஜெய்தீப் தாஸ் (20) ஆகியோர் பதுங்கியிருந்து தாக்கினர். இதில் மயங்கி கீழே விழுந்த அவரின் கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் அவரது உடலை ஏற்கெனவே இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டமிட்டு வாங்கி வைத்திருந்த டிராலியில் அடைத்தனர்.
இதுகுறித்து பெற்றோருக்கு தெரிவித்த நிலையில், மறுநாள் காலை கண்டாச்செராவிலிருந்து அகர்தலா வந்த தீபக்கரின் பெற்றோர் தீபக் மற்றும் டெபிகா சஹா, ஷரிஃபுல் உடல் வைக்கப்பட்ட டிராலியை எடுத்துச் சென்றனர்.
அவர்கள் தான், ஷரிஃபுலின் சடலம் இருந்த டிராலியை தங்களது கடையில் இருந்த ஐஸ்கிரீம் ஃப்ரீசரில் மறைத்து வைத்தனர்.
இந்த கொலைக்குப் பின்னால் முக்கோணக் காதல் தான் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது” என எஸ்.பி குமார் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் இன்று அகர்தலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சமீபத்தில் மேகாலயாவில் நடந்த ‘தேனிலவு கொலை’யைத் தொடர்ந்து, அதன் அண்டை மாநிலமான திரிபுராவில் நடந்த இந்த முக்கோண காதல் கொலை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
