என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும், எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியையும் மட்டுமே என்னுடைய அடையாளமாக கொண்டவள் நான் என காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பெயர்கள் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரை மேலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடுவும், கவுண்டம்பாளையத்தில் சூரிய பிரகாஷும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஏற்கனவே கட்சியில் 40 ஆண்டுகாலம் வரை உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காதது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் பெண் வேட்பாளரான ஸ்ரீநிதி பெயருக்கு பின்னர் சாதி பெயர் இருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுகுறித்து சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீநிதி இன்று (ஏப்ரல் 4) தனது எக்ஸ் பதிவில், “நான் ஸ்ரீநிதி வெங்கடேச மோகன். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள்.
தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதிய அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்ததும் எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சு பிழையால்(Clerical Error) ஏற்பட்டுவிட்டது.
என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும், எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியையும் மட்டுமே என்னுடைய அடையாளமாக கொண்டவள் நான்.
சாதி-மத பேதமற்ற சமத்துவமே எனது கொள்கை.”என தெரிவித்துள்ளார்.
