கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல் 10) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக சார்பில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் களம் காண்கிறார். இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் ஏப்ரல் 7ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில் பிரச்சாரம் தொடங்கி 3 ஆவது நாளான இன்று அவர் திடீர் உடல் நலக்குறைவால் KMCH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 48 மணி நேரம் சிகிச்சையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை காலை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், மற்றும் கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜுனன் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
