புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தல்
தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அடிப்படையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது புதிய பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன் முக்கிய அம்சமாக, 6ஆம் வகுப்பு முதல் மூன்றாவது மொழி (Third Language Policy) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2026-27 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தில், மொழிகள் மூன்று நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளன:
- R1 (முதல் மொழி)
- R2 (இரண்டாம் மொழி)
- R3 (மூன்றாம் மொழி)
இந்த முறைப்படி, மாணவர்கள் மூன்று மொழிகளை கற்க வேண்டியது கட்டாயம். இதில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என விதி குறிப்பிடுகிறது.
முன்னதாக, மூன்றாவது மொழி 6 முதல் 8ம் வகுப்பு வரை மட்டுமே இருந்த நிலையில், தற்போது 10ம் வகுப்பு வரை தொடரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
எப்போது முழுமையாக அமலுக்கு வரும்?
இந்த மாற்றம் கட்டங்களாக அமல்படுத்தப்படும். 2026-27ஆம் ஆண்டில் 6ஆம் வகுப்பில் மூன்றாவது மொழி அறிமுகம் செய்யப்படும். 2029-30ஆம் ஆண்டில் மேல்நிலைகளில் விரிவாக்கம் செய்யப்படும். 2031ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்றாவது மொழி சேர்க்கப்படும்.
என திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் கூடுதல் அம்சங்கள்
இந்த மாற்றத்துடன் சேர்த்து, தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி (வொகேஷனல் எஜுகேஷன்), கலை மற்றும் உடற்கல்வி, கணினி சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு, போன்ற பாடங்களும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், மாணவர்களின் முழுமையான திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
விவாதம் மற்றும் எதிர்ப்பு
மூன்று மொழி முறை அறிமுகம் சில மாநிலங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மொழி திணிப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மத்திய அரசு தரப்பில் இது அனைத்து மொழிகளையும் சமமாக ஊக்குவிக்கும் முயற்சி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
6ஆம் வகுப்பு முதல் மூன்றாவது மொழியை கட்டாயமாக்கும் சி.பி.எஸ்.இ புதிய பாடத்திட்டம், இந்திய கல்வி அமைப்பில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. பல மொழிகளை கற்கும் திறனை மாணவர்களுக்கு வழங்கும் இந்த முயற்சி, எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
