மத்திய பாஜக அரசால் மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாது. ஏனெனில் இதனை உருவாக்கியதே பாஜக அரசு தான் என்று கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே உள்ளிட்டோரை நேற்று சந்தித்து பேசினார் கே.எஸ்.அழகிரி.
அதனைத்தொடர்ந்து இன்று (ஜூன் 28) காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ”மக்கள் பிரச்சனையுடன் நிற்கும்போது தான் நாம் சரியான அரசியல் செய்கிறோம் என்று அர்த்தம்.
அந்த வகையில் இன்று நடைபெறும் மணிப்பூர் பிரச்சனை குறித்த இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த மே மாதம் 3ஆம் தேதியில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து வருகிறது. வெறும் 35 லட்சம் மக்கள் மட்டுமே இருக்கும் அந்த மாநிலத்தில் மத்திய அரசு திட்டமிட்டு கலவரத்தை தூண்டியுள்ளது.
எப்படி குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக கலவரம் நடந்து இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்களோ, அதுபோல தற்போது மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது.
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்தேறிய கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதே உண்மை. அதேபோல் இன்று மணிப்பூரிலும் மத்திய பாஜக அரசு கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது.
அங்கு கிறிஸ்தவர்களும், இந்துகளும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு வெறுப்பை புகுத்தி, அதனை பாஜகவின் இந்து அமைப்புகள் மூலம் பலப்படுத்தி, அதில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதத்தை வழங்கி இந்த கலவரத்தை நிகழ்த்தியுள்ளார்கள்.
14 நாட்களில் இந்திய ராணுவத்திற்கு சமமான ராணுவம் வைத்திருந்த பாகிஸ்தானை தோற்கடித்து வங்காள தேசம் என்ற நாட்டை மறைந்த பிரதமர் இந்திரகாந்தி உருவாக்கினார்.
ஆனால் அதைவிட இன்று வலிமைமிகுந்த நமது ராணுவத்தை கொண்டு வெறும் பத்தாயிரம் பேர் ஈடுபட்டுள்ள கலவரத்தை அடக்க முடியவில்லை என்பதில் இருந்தே பாஜக அரசின் கொடூர முகம் தெரியவந்துள்ளது” என்றார்.
மேலும், “மத்திய அரசால் இந்த மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாது. ஏனெனில் இதனை உருவாக்கியதே பாஜக அரசு தான். இது தான் பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல்.
ஏனென்றால் மணிப்பூர் மக்கள் தங்கள் மதங்களை கடந்து ஒற்றுமையாக இருந்தால் பாஜகவால் அரசியல் செய்ய முடியாது. எனவே அவர்களுக்குள் மத ரீதியாக கலவரத்தை தூண்டி பிளவை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் ஒரே மொழி, ஒரே மதம் என்று கருத்தை முன்வைக்கும் பாஜக ஒரே ஜாதி என்ற வார்த்தையை மட்டும் ஒருபோதும் சொல்லாது.
பிரதமர் மோடியால் அமெரிக்கா செல்ல முடிகிறது. போபாலில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க செல்ல முடிகிறது. ஆனால் மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்ட முடியவில்லை.
ஏன் 50 நாட்கள் கடந்தும் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.” என்று கே.எஸ் அழகிரி குற்றஞ்சாட்டினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
குவாரிகளுக்கு மூடுவிழா காண துடிக்கும் திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்!
