தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு (Vilavancode) சட்டசபை தொகுதியில் கேரளா சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகி டிடி பிரவீனை (T.T.Praveen) வேட்பாளராக்கியிருக்கிறது காங்கிரஸ்.
கடந்த ஏப்ரல் 1-ந் தேதியன்று நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், “விளவங்கோடு தொகுதிக்கு மலையாளி வேட்பாளர் ஒருத்தரை ரெடியா கையில வெச்சுகிட்டு இருக்கிறாராம் கேசி வேணுகோபால்..” என எழுதி இருந்தோம்.
நாம் சொன்னதைப் போலவே விளவங்கோடு தொகுதியில் கேரளாவைச் சேர்ந்த டிடி பிரவீனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், “சிஎஸ்ஐ தென் கேரளா டயோசீஸ் பிரிவின் செயலாளராக இருப்பவர் டிடி பிரவீன். கேரளா மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏராளமானோர் வேட்பாளர்களாக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்வதற்காகவே டிடி பிரவீனுக்கு தமிழ்நாட்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளனர்” என்கின்றனர்.
மேலும், டிடி பிரவீனின் சொந்த ஊரான் காரக்கோணத்தின் ஒரு பகுதி தமிழ்நாட்டிலும் மற்றொரு பகுதி கேரளா மாநிலத்திலும் உள்ளது. தமிழகத்தில்தான் பிரவீனுக்கு வாக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
