என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாஜக தலைமை இன்று (ஏப்ரல் 3 ) 27 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா இல்லையா என அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.
ஆனால் இன்று வெளியிட்ட பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.
எனினும் வேட்பாளர்கள் பட்டியலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என்று குறிப்பிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
”2026 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஊழல், மெத்தனப்போக்கு மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்துள்ள தமிழகத்தின் ஒவ்வொரு சகோதர, சகோதரிகளின் ஆதரவையும் இவர்கள் சுமந்து நிற்கிறார்கள்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா வலிமை, வளர்ச்சி மற்றும் இலட்சியத்தோடு முன்னேறிச் சென்றுள்ளது. தேசம் முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தோல்வியுற்ற, அகங்காரமான மற்றும் சுயநலமான திமுக அரசாங்கத்தால் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது.
ஒரு காரியகர்த்தாவாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக அவர்களோடு தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரச்சாரம் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.
