தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் 5 லட்சம் மதிப்புடையது என்றும் வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிட்டால் எளிய மக்கள் அனைவரும் வாங்கி மகிழுவார்கள் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்திருந்தார்.
அவரை தொடர்ந்து திமுகவினர் பலரும் சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் குறித்து கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்தநிலையில், ரஃபேல் வாட்ச் வாங்கிய விலையின் ரசீது உள்பட தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் நான் திமுகவுடன் சண்டையிட தயாராக உள்ளேன்.
மே 2021-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட எனது ரபேல் வாட்ச் விலையின் ரசீது, எனது வாழ்நாள் வருமான வரி கணக்குத் தாக்கல் விவரங்கள், கடந்த 10 ஆண்டு வங்கி பரிவர்த்தனை விவரங்கள், ஆகஸ்ட் 2011-ஆம் ஆண்டு முதல் நான் ஐபிஎஸ் அதிகாரியாக பெற்ற வருமானம், எனக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்கள், ஆடு மாடுகளின் எண்ணிக்கை உள்பட அனைத்து விவரங்களையும் நான் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்க நடைபயணத்தை துவங்கும் நாளில் வெளியிடுவேன். இது மிக விரைவில் நடக்கும்.
அன்றைய தினம் நான் செய்தியாளர் சந்திப்பை நடத்தி எனது சொத்துப் பட்டியலை வெளியிட்டு மக்களை சந்திக்க தொடங்குவேன். அதில் நான் அறிவித்ததை விட 1 பைசா சொத்தை யாரேனும் கூடுதலாக கண்டுபிடித்தால் எனது சொத்துக்கள் அனைத்தும் அரசிடம் ஒப்படைக்கப்படும். இப்போது இந்த விவகாரத்தை எனது தமிழக சகோதர சகோதரிகளிடம் விட்டுவிடுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வம்