நிதி இழப்பைக் குறைத்து நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, Air India Express நிறுவனத்தை Air India குழுமத்தின் ஒரே செயல்பாட்டுக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவது குறித்து புதிய தலைமை செயல் அதிகாரி Tewolde Gebremariam ஆலோசித்து வருகிறார்.
இந்தத் திட்டம் தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு நிறுவனங்கள் தேவையா?
Air India மற்றும் அதன் குறைந்த கட்டண விமான நிறுவனமான Air India Express ஆகியவை தனித்தனி செயல்பாட்டு அனுமதிகளுடன் இயங்கி வருகின்றன.
சமீபத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகளில், இரண்டு தனித்தனி விமான நிறுவனங்களை இயக்க வேண்டிய அவசியம் குறித்து Tewolde கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்தால், ஒழுங்குமுறை நடைமுறைகளைக் குறைப்பதுடன் தனித்தனி நிர்வாகக் குழுக்கள், பொறியாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கான செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும் என்பது அவரது எண்ணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Air India Express பெயர் தொடரலாம்
இணைப்பு திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனை செயல்படுத்த Air India நிர்வாகக் குழுவின் ஒப்புதல் தேவைப்படும். இணைப்பு நடந்தாலும், Air India Express என்ற பிராண்ட் பெயர் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் என விவகாரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் Air India சுமார் ரூ.22,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதனால் செலவைக் குறைத்து செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பது புதிய நிர்வாகத்தின் முக்கிய பணியாக மாறியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் வான்வெளி மூடல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் அதிகரிக்கும் எரிபொருள் செலவு போன்ற சவால்களையும் நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.
இணைப்புகள் Air India-க்கு புதிதல்ல
2022-ல் Tata Group வசம் Air India வந்த பிறகு விமான நிறுவனங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டது. நான்கு விமான பிராண்டுகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்டு தற்போது Air India மற்றும் Air India Express என இரண்டு முக்கிய பிராண்டுகளாக இயங்கி வருகின்றன.
