தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (பிப்ரவரி 12) தொடங்கியது. பிப்ரவரி 10 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் சொன்னபடியே இன்றைய பேரவை நிகழ்ச்சிகள் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் உரையாற்ற வந்த ஆளுநர் அரசின் உரையில் சில பகுதிகளை சேர்த்தும் நீக்கியும் வாசிக்க அது சர்ச்சையானது.
மேலும் உடனடியாக எழுந்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ‘வாசித்த’ உரை அவைக் குறிப்பில் ஏறாது என்றும் உறுப்பினர்களுக்கு ‘அளிக்கப்பட்ட’ எழுத்து ரீதியான உரையே ஆளுநர் உரையாக கருதப்படும் என்று தீர்மானம் கொண்டு வந்து அது நிறைவேற்றப்பட்டது. இதை அறிந்த ஆளுநர் உடனடியாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான இந்த சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலும் இதேபோல அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் ஒரு தீர்மானம் கொண்டுவர, ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார்.
இன்று (பிப்ரவரி 12) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்த ஆளுநர் மரியாதையாக பேரவைக்கு பேரவைத் தலைவரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
என் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது – ஆளுநர்
அதன் பின் உரையை வாசிக்கத் தொடங்கினார் ஆளுநர்.
“மதிப்புக்குரிய சட்டப்பேரவைத் தலைவர் அவர்களே…மதிப்புக்குரிய முதல்வர் அவர்களே… மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே… சட்டப்பேரவை அலுவலர்களே,… ஊடக நண்பர்களே தமிழக சகோதர சகோதரிகளே…” என்று தமிழில் அழைத்த ஆளுநர்,
‘இந்த மாபெரும் சபையில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது எனது பெரும்பேறு. அனவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த அரசு திருவள்ளுவரின்
‘பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து’
என்ற அழியாத வரிகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது” என்பது வரை உரையை வாசித்த ஆளுநர், அதற்குப் பின் சற்று நிறுத்தி…
“ நண்பர்களே இந்த உரையின் முதலிலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்கிற எனது வேண்டுகோளும் அறிவுரையும் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த உரையின் பல பகுதிகள் தரவுகள் அடிப்படையிலும் தார்மீக அடிப்படையிலும் எனக்கு ஒப்புக் கொள்ள இயலாத வகையில் உள்ளது.
எனினும் இந்த சட்டமன்றத்துக்கு மதிப்பளித்து இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். இந்த சட்டமன்றம் மக்களுக்கு தேவையான ஆக்கபூர்வமான விவாதங்களை தொடர வாழ்த்துகிறேன்” ” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.
அப்போது ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் பின் வரிசையில் இருந்து சில குரல்கள் எழ… முன் வரிசையில் இருந்தவர்கள் அவர்களை கையசைத்து அமைதிப்படுத்தினர்.
ஆளுநர் உரையாற்றிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்துவிட, முதல்வர் அமைச்சர் துரைமுருகனை பார்த்தார். துரைமுருகன் சட்டெனெ தன் கையில் வைத்திருந்த ஆளுநர் உரை உள்ளிட்ட காகிதங்களோடு எழுந்தார். சட்டென ஒலிபெருக்கி முதல்வரிடம் கொண்டுவரப்பட்டது.
கணக்கில் காட்டாத பி.எம். கேர்! சம்பவம் செய்த சபாநாயகர்
சில நொடிகள் ஆலோசித்த முதல்வர் ஒலிபெருக்கியை சபாநாயகரிடம் கொடுக்க சபாநாயகர் அப்பாவு, முழுமையாக ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார். அவர் தமிழாக்கத்தை வாசித்து முடிக்கும் வரை ஆளுநர் அமைதியாக அமர்ந்திருந்தார்.
சபாநாயகர் உரையை வாசித்து முடித்ததும் கூடுதலாக, “நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்களை முறைப்படி மரியாதையோடு அழைத்து வந்தோம். அவரது ஒப்புதல் பெற்று ஆளுநர் உரையை தயாரித்தோம். வந்த இடத்தில் உரையை குறைவாக வாசித்தார்கள். அதை நான் குறையாக சொல்லவில்லை.
ஜனகனமனவை முதலிலும் பாட வேண்டும் என்று சொன்னார்கள். எல்லாருக்கும் நிறைய கருத்துகள் இருக்கின்றன. அவற்றை அவையில் சொல்வது மரபல்ல. ஆளுநர் பதவி மிக உயர்ந்த பதவி. ஆளுநர் அவர்களோடு எத்தனையோ கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் இந்த அரசு, முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆளுநரை மாண்போடு நடத்துவதுதான் நமது பண்பு.
உங்களது கருத்தை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். எங்கள் கருத்தை நாங்கள் சொல்லலாமா? இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபாய் தரவில்லை. பி எம் கேர் ஃபண்டில் பல லட்சம் ரூபாய் கணக்கு கேட்க முடியாமல் உள்ளது. அதில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஐயா ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே?
துரைமுருகன் தீர்மானம் – ஆளுநர் வெளிநடப்பு!
சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாடு சட்டமன்றம்” என்று சொல்லி அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவருவார் என்று கூறினார் சபாநாயகர் அப்பாவு.
அமைச்சர் துரைமுருகனிடம் ஒலிபெருக்கி கொடுக்கப்பட்ட நிலையில்… அதற்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி விருட்டென எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன், “சட்டப்பேரவை விதி 17 ஐ தளர்த்தி இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். 2024 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சமர்பிக்கப்பட்ட ஆளுநர் உரை இந்த மன்றத்துக்கு வழங்கப்பட்ட வடிவிலேயே அவைக் குறிப்பில் ஏற்றப்பட வேண்டும்” என்று துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின் சபாநாயகர், “ஆளுநர் நாட்டுப் பண் குறித்த ஒரு பிரச்சினையை எழுப்பினார்கள். இப்பேரவை எப்போதும் மரபுகளை மதித்து பின்பற்றி வருகிறது. ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் உரைக்கு பின்னர் நாட்டுப் பண்ணும் பாடப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார்.
பிப்ரவரி 10 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில், ‘சட்டமன்றத்தில் ஆளுநர் உரை… ஸ்டாலின் -ஆர்.என். ரவி தனித்தனியே ஆலோசனை! மீண்டும் சம்பவம்?’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
அதில், “இந்த வருடம் திமுக அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிப்பாரா அல்லது கடந்த 2023 ஜனவரி 9 ஆம் தேதி நடந்தது போல சில பகுதிகளை சேர்த்து, சில பகுதிகளை நீக்கி வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தொடர்ந்து அரசோடு மோதல் போக்கில்தான் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர். இந்த நிலையில் ஆளுநரின் திட்டம் என்னவாக இருக்கும் என்று முதலமைச்சர் அதிகாரிகளிடம் உரையாடும் போது விசாரித்திருக்கிறார்.
‘கடந்த முறை போல இந்த முறை ஆளுநர் நடந்துகொள்ளமாட்டார் என்று நம்பலாம். ஏனென்றால் நாம் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றபோது முதலமைச்சருடன் இணக்கமாக செல்லுமாறு உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில், சென்ற வருடம் போல இந்த முறையும் செய்தால் அது திமுகவுக்கே அரசியல் ரீதியான ஆதாயமாக இருக்கும் என்று ஆளுநருக்குத் தெரியும். அதனால், இந்த முறை அப்படி செய்யமாட்டார்’ என்று முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
அதேநேரம் ஆளுநர் மாளிகையிலும் இது தொடர்பான ஆலோசனைகள் சில நாட்களாக நடந்து வருகின்றன. ஆளுநர் உரை தொடர்பாக கடந்த வருடம் பின்பற்றிய நடைமுறையை பின்பற்றலாமா அல்லது சில நாட்களுக்கு முன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், அம்மாநில சட்டமன்றத்தில் மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் முதல் பத்தியையும் கடைசி பத்தியையும் மட்டும் வாசித்து ஒன்றே கால் நிமிடத்தில் முடித்துவிட்டாரே… அதை பின்பற்றலாமா என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் நடந்திருக்கின்றன.
ஆளுநர் மாளிகைத் தரப்பில் விசாரித்தபோது, ‘ஆளுநர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அவரது வழக்கமான பாணியில் சில நடவடிக்கைகள் இருக்கும்’ என்று கூறுகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.
மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் பிப்ரவரி 10 ஆம் தேதி குறிப்பிட்டதே பிப்ரவரி 12 ஆம் தேதி நடந்திருக்கிறது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…