தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் டெல்லியிலும் பீகாரைச் சேர்ந்தவர் சென்னையிலும் வாக்காளராக பதிவு செய்ய முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்க்கும் அபாயம் குறித்து சுட்டிக் காட்டி விமர்சித்திருந்தார். அதில், அப்படி பீகாரைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாகும் போது, தமிழக மக்கள் விரும்பும் ஒரு அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப் பெரிய தலையீடாகும். சாத்பூஜை கொண்டாட்டங்களுக்கு சொந்த மாநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள், தேர்தலின் போதும் வாக்களிக்க ஏன் செல்லக் கூடாது என கேள்வி எழுப்பி இருந்தார் ப.சிதம்பரம்.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் சாசனத்தின் 19 (1) (இ)-ன் படி இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தியாவில் எந்த பகுதியில் வசிக்கவும் குடியேறவும் உரிமை உண்டு. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 19 (பி)-ன் படி, ஒரு தொகுதியில் வசிக்கும் ஒவ்வொருவருமே வாக்காளராக பதிவு செய்ய முடியும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் வாக்காளராக முடியும்; பீகாரைச் சேர்ந்தவர் சென்னையில் வாக்காளராக முடியும்.
ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்படவில்லை; இந்த நிலையில் 6.5 லட்சம் பீகாரிகள் தமிழ்நாட்டின் வாக்காளர்களாக சேர்க்கப்படுகின்றனர் என கூறுவது அபத்தமானது என்கிறது தேர்தல் ஆணையம்.
