பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சீட்லா மாதா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாலந்தா மாவட்டத்தில் மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள சீட்லா மாதா கோயிலில் இன்று (மார்ச் 31) சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்பேபோது ஏராளமானோர் கோயிலில் கூடியிருந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக 9 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும், போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணமும் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
