மரபின் மைந்தன் முத்தையா
சமூக ஊடகங்களில் அடிக்கடி வ உ சி வாலேஸ்வரன் புகைப்படம் ஒரு சுற்று வரும். கப்பலோட்டிய தமிழரின் மகன் நேற்று இறந்துவிட்டார். ஊடகங்கள் அவற்றை சொல்லாது. நீ தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணு என்கிற வாசகத்தோடு வரும். உண்மையில் வா உ சி வாலேஸ்வரன் அவர்கள் மறைந்தது 2015 ஜூலை மாதம் 25ஆம் தேதி. அப்துல் கலாம் மறைவுக்கு ஒரு நாள் முன்னர் என்று நினைக்கிறேன். அதனாலேயே அவருடைய மறைவு பெரிய அளவில் மக்களை சென்று சேரவில்லை.
கப்பலோட்டிய தமிழர் வ. உ சி அவர்களுடைய வாரிசுகளில் மூத்த மகன் திரு சுப்பிரமணியம் அவர்களை என்னுடைய மாணவப்பருவத்தில் பார்த்து ஒரு முறை பேசியிருக்கிறேன். அதிகம் பழகியதில்லை. அதன்பின்னர் வ. உ சி அவர்களின் புதல்வர் திரு. வாலேஸ்வரன் அவர்களை முதல்முறையாக பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் திரு மாரியப்பன் அவர்கள் இல்லத்தில் முதல் முறையாக சந்தித்தேன். அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு வரும் என்று அப்போது நான் நினைக்கவில்லை.

கோவையில் நண்பர் திரு கோவை ரமேஷ் சுதந்திர வெளிச்சங்கள் என்னும் தலைப்பில் தொடர் உரைகள் நிகழ்ச்சியை திரு தமிழருவி மணியன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்திருந்தார். அந்த வரிசையில் வ உ சி பற்றிய உரையின் போது முன்னிலை வகிக்க திருவாலேஸ்வரன் அவர்களை அழைக்க முடிவு செய்தோம்.
அவரும் வருகை தர ஒப்புக்கொண்டார். அப்போது அவர் திண்டுக்கல்லில் இருந்தார். ரயிலில் வந்த அவரை விழாக்குழுவினர் வரவேற்றோம்.
அவர் வந்து சேர்ந்து கொஞ்ச நேரத்தில் கோவை மத்திய சிறையில் வ.உ.சி இருந்தபோது அவர் இழுத்த செக்கை காண்பதற்கு அழைத்துச் சென்றோம். ஒரு குவாலிஸ் காரில் அனைவரும் போனோம். முன்னிருக்கையில் அவர் இருந்தார்.
முன்னதாகவே சிறைத்துறை அனுமதி பெற்று இருந்ததால் காவலர்கள் மரியாதை செலுத்தி அவரை வரவேற்றனர். நான் சற்றே குனிந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். எனக்கு பதில் சொல்ல திரும்பிய அவர்கள் கண்களில் கண்ணீர். என்னங்கய்யா என்றேன்.
“இல்ல இதே வழியில்தான் எங்க அப்பாவ சங்கிலியில் கட்டி இழுத்துப் போயிருப்பார்கள். நாம ஏசி கார்ல போறோம்” என்றார்.
மதிய உணவுக்கு நண்பர் ரவீந்திரன் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தோம். சாப்பிட அழைத்த போது கொஞ்சம் தயங்கினார். ஏன் எங்களுக்கு புரியவில்லை. பின்னர் ஒப்புக் கொண்டு வந்தார். நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர் சாப்பிடும் வரை கைகழுவாமல் காத்திருந்தோம். “எழுந்து போய் கை கழுவுங்க” என்றார். “இருக்கட்டும் பரவாயில்லைங்க” என்றோம். இப்ப மரியாதைக்காக உட்கார்ந்து இருப்பீங்க அங்க போய் வாஷ்பேசின்ல க்யூல நிக்க வச்சுடுவீங்க என்றார்.
அபாரமான நகைச்சுவையாளர் அவர்.
அவரை கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் தங்க வைத்தோம். அவ்வளவு எளிமையான ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. விழா நேரத்தில் அவரை அழைத்துப் போக அறைக்கு நான் வருவதாக சொல்லியிருந்தேன். மழை காரணமாக விழா தொடங்க தாமதம். எனவே அவரை மெல்ல வந்து அழைத்துக் கொள்ளலாம் என்று சற்று தாமதமாகப் போனேன்.
அதற்குள் அவர் விழா அரங்கிற்கு எப்படிப் போவது, ஆட்டோவில் எவ்வளவு செலவாகும் என்று முழு விவரங்களையும் விசாரித்து வைத்திருந்தார். நான் சென்றதும் “நீங்க வந்திருக்காட்டி ஆட்டோல புறப்பட்டு இருப்பேன். 60 ரூபா ஆகும்னு சொன்னாங்க. என் கையில நூறு ரூபா இருக்கு. அப்புறம் என்ன கவலை” என்றார்.
அவரைப் பார்த்த மாத்திரத்தில் கூடியிருந்த கூட்டத்தினர் உணர்ச்சிவயப்பட்டனர். ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று வரவேற்றனர். தன் தந்தை குறித்த சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இரவு உணவுக்கு அழைத்தபோது மீண்டும் தயங்கினார். விசாரித்தபோது விஷயம் தெரிந்தது. மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் அவர் தயங்கிய தன் காரணம் இதுதான். அமைப்பாளர்களுக்கு தொந்தரவும் தரக்கூடாது என்று மதிய உணவுக்கு மோர் சோறும் இரவு உணவுக்கு இட்லி மிளகாய் பொடியும் கையிலேயே கொண்டு வந்திருந்தார்.
நாங்கள் எங்களுடன் உணவுண்ண அழைத்ததும் இட்லி பொட்டலத்தை காண்பித்தார். நாங்கள் வற்புறுத்தவே தன் மனைவியை தொலைபேசியில் அழைத்தார். அவர் பேசிய சொற்களை அப்படியே தருகிறேன்
**எட்டி! நான் வாலேஸ்வரன் பேசுறேன் சொகமா இருக்கியா**
…….
**விழா எல்லாம் ரொம்ப பிரமாதமாக நடந்தது**.
**இவ்வோ என்ன சாப்பிட கூப்பிடுதா**
**அவாள் கூடவே சாப்பிடவா? அப்படி சொல்லுதியா**
**அப்ப நீ கொடுத்து இட்லி இருக்கே அதை என்ன பண்ண**
**நாளைக்கு கொண்டாந்து உன்கிட்டேயே தந்துடவா?**
**இட்லியும் உன்ன மாதிரியே முறைச்சு முறைச்சு பார்க்கு**..
**அதான் கேட்டேன்”**
இந்த உரையாடலுக்கு பிறகு எங்களுடன் உணவு உண்ண வந்தார்.
அரசாங்கம் வ உ சி நூல்களை நாட்டுடமை ஆக்கி குடும்பத்தினருக்கு ஒரு தொகை தந்தது பற்றி பேச்சு வந்தது. விரக்தியுடன் சிரித்தார்.
மெல்ல சொன்னார், அந்த காசோலையை கொடுத்துட்டு ஒரு அதிகாரி என்கிட்ட கமிஷன் எதிர்பார்த்தார். நான் தரலை. அதனால அந்த செக்கை பவுன்ஸ் பண்ண என்னை அலைய விட்டார். எங்கிட்ட பணம் இல்லை. இருந்திருந்தா கேஸ் போட்டு இருப்பேன்” என்றார்.
அடுத்த நாள் ஊருக்கு புறப்பட்டு சென்றார். ரமேஷ் அவரை தொலைபேசியில் அழைத்து ஐயா நல்லபடியா ஊருக்கு போய் சேர்ந்தீங்களா என்று கேட்டார்
அவருடைய பதில். “ஆமாம் நல்லபடியாத்தான் வந்தேன் ஏன்? என்ன நோக்கத்தில அனுப்பினீய?
சிரித்தபடியே ரமேஷ் “அய்யா வீட்டில அம்மாவ விசாரித்ததா சொல்லுங்கய்யா என்றார்.
“இப்பம் தூங்கிட்டு இருக்கா எழுந்த பிறகு சொல்லவா எழுப்பி சொல்லவா “என்றார்.
அதன்பிறகு பல சூழ்நிலைகளில் அவரை சந்திக்க வாய்த்தது. இடையில் சில நாட்கள் பேசாமல் இருந்துவிட்டால் உடனே ஒரு கடிதம் போடுவார்.
ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்து இருந்தபோது உடல்நலக்குறைவால் அவரால் வரமுடியவில்லை. உடல் நலம் இல்லை என்பதை ஒரு கவிதை போல எழுதி அனுப்பியிருந்தார். அப்போது அவருக்கு காது வலி.
மருத்துவரைப் பார்க்கப் போனேன்.
இருக்கையில் அமரச் செய்தார். சிவபெருமான் போல் நெற்றியில் வெளிச்சக் கண் முளைக்க அருகே வந்தார். ஆசிரியர் போல் என் காதுகளை திருகினார்
என்பதாக அந்தக் கவிதை இருக்கும்.
அவர் மதுரையில் நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு குடியேறிய பின்னர் தமிழ் இசைச் சங்கம் விழாவிற்காக மதுரை சென்றிருந்தேன். இவரை பார்க்க எண்ணம் வந்தது. என்னுடன் எழுத்தாளர் சுகா, இசைக்கவி ரமணன், தங்கை செழியன் ஆகிய நண்பர்கள் அவரைப் பார்க்க ஆர்வத்துடன் கூட வந்தார்கள்.
மகிழ்ச்சியோடு வரவேற்று சிற்றுண்டியும் காப்பியும் கொடுத்தார். வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். இசைக்கவி ரமணனைப் பார்த்ததும் “ உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இருக்கிறேன்” என்றார். ரமணன் தன் பாடல்களை பாட தயாரானார். கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி குரல் கொடுத்தார்,
“எட்டி அவா பாடப் போகிறார் உன் காப்பி கடையை சாத்திட்டு வா” என்றார்.
பின்னர் ஒரு புகைப்படத்தைக் காட்டினார்.வ உ சி அமர்ந்து இருக்க அவர் துணைவியார் நின்று கொண்டிருக்கும் படம் அது.. ரமணன் அந்த புகைப்படத்தைப் பார்த்து “அம்மா உயரமா இருக்காங்க” என்றதும் அடுத்த வினாடி பதில் வந்தது. “அப்பா உட்கார்ந்திருக்காங்கல்லா”
நாங்கள் புறப்படத் தயாரானோம். தன் மனைவியை அழைத்தார். இவங்களுக்கெல்லாம் காபி கொடுத்தே பயம் காட்டறியே சாப்பாடு போட்டு பயம் காட்ட வேண்டாமா என்றார்.
ஒவ்வொருவராக விழுந்து வணங்கினோம் “வயசானப்புறம் எனக்கு ரெண்டே வேலை. லெட்டர் போடறது, ஆசீர்வாதம் பண்றது” என்றபடியே திருநீறு பூசினார்
. இசைக்கவி ரமணன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் விழுந்தவர் எழ சற்றே தாமதமானது. உடனே என்னை பார்த்து “ஒறங்கிவிட்டாரோ? எழுப்பி விடணுமோ” என்றார்.
இந்த சந்திப்பு பற்றி சுகா சுப்பையாவின் மருமகன் என்ற தலைப்பில் அருமையான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். சுப்பையா என்பது பாரதியை குறிக்கும். எங்கள் உரையாடலில் பேச்சுக்குப் பேச்சு பாரதி மாமா என்று வாலேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டது தான் இந்த தலைப்புக்கு காரணம்.
சென்னையில் விழா ஒன்றில் இருந்த போது அவருடைய மறைவுச் செய்தி வந்தது. சென்னையில் புதல்வர் இல்லத்தில் அவர் மறைந்தாரென்று தெரிந்து கொண்டேன். நேரில் சென்று அஞ்சலி செலுத்த வாய்ப்பு கிடைத்தது.
தன் தந்தையைப் போலவே மன உறுதியும் நேர்மையும் மிகுந்த மனிதர் வாலேஸ்வரன். தன் குழந்தைகளுக்கு கூட படிப்புக்காகவோ வேலைக்காகவோ சிபாரிசு கடிதங்கள் கொடுத்ததில்லை. அதிகபட்சமாக அவர்களுக்கு இவர் தந்தவை சான்றிதழ்களே. “இன்னார் கப்பலோட்டிய தமிழன் வ உ சியின் பெயரன் என்று சான்றளிக்கிறேன்” என்பதைத் தாண்டி எதையும் எழுதியதில்லை.
தொழிலாளர் நல அலுவலராக இருந்து பணி ஓய்வு பெற்று எளிமையாகவும் மனநிறைவோடும் வாழ்ந்த வ உ சி வாலேஸ்வரன் அவர்கள் மறக்கவே முடியாத மாமனிதர்.
நன்றி: [நம்பிக்கை ஆன்லைன்](https://news.nambikkaionline.com/index.php/2020/05/13/palaki-paarthathil-ivargal-voc-valeshwaran/)
**கட்டுரையாளர் குறிப்பு**
மரபின் மைந்தன் முத்தையா கவிஞர், எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர். ‘நமது நம்பிக்கை’ என்ற சுயமுன்னேற்ற மாத இதழைத் தொடங்கி, ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். மத்திய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கிய எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் அறங்காவலர். கவிப்பேரரசு வைரமுத்துவை நிறுவனத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் வெற்றித்தமிழர் பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர். சத்குரு உருவாக்கிய கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் திட்டக் குழு உறுப்பினர். சிகரம் உங்கள் உயரம் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் இயக்குனர்.
�,”