இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 500ஐ தாண்டியது!

Published On:

| By admin

கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதையும் கொரோனா பெருந்தொற்று வாட்டி வதைத்தது. மேலும் உக்ரைன் – ரஷ்யா போர் 100 நாட்களை தாண்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கொரோனா பரவல் உலகம் முழுவதும் பல இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆப்ரிக்கா நாடுகளில் மட்டும் பரவி வந்த குரங்கு அம்மை தொற்று நோயானது ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் பரவி வருவது மக்களை மேலும் பீதியடைய செய்துள்ளது. இந்த குரங்கு நோய், பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருபவர்களுக்குதான் பரவும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்தது. மேலும் இது கொரோனா பெருந்தொற்று போல பரவாது என்றும் தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்த குரங்கு அம்மை நோயானது தற்போது இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் பரவியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோய் 500க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது என்று இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது வரை குரங்கு அம்மை நோயினால் 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குரங்கு அம்மை நோய் பரவலை அவசர நிலையாக கருத வேண்டுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share