இந்திய கூட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்காவில் உள்ள ரெவ்லான் இன்க் நிறுவனத்தை வாங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
கடந்த 1932ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரெவ்லான் நிறுவனம் அழகுசாதனப் பொருட்கள், தோல் பராமரிப்பு, நறுமணம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு ஆகியவற்றை கையாளும் ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும். அந்த அழகுசாதன நிறுவனம் திவால்நிலைக்குத் தாக்கல் செய்த சில நாட்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதை வாங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ரெவ்லான் எதுவும் பதிலளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
உலகளவில் மூலப்பொருள் விலை உயர்வின் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ரெவ்லான் அழகுசாதன நிறுவனத்தில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால் இந்த வாரத் தொடக்கத்தில் திவால் நிலைக்கு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்பது இந்தியாவின் மும்பையை மையமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு கூட்டு நிறுவனமாகும். இது ஆற்றல், பெட்ரோ கெமிக்கல்ஸ், இயற்கை எரிவாயு, சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு வணிகங்களைக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்திய மாதங்களில் அதன் முக்கிய எண்ணெய் வணிகத்திலிருந்து வேறுபட்டு, ஃபேஷன் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு வணிகங்களிலும் இறங்கியது.
தற்போது ரெவ்லான் இன்க் நிறுவனம் திவால் நிலைக்கு தாக்கல் செய்த நிலையில் அந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்க முன்வந்துள்ளது. இந்த அறிக்கை வெளியானதும் சந்தை வர்த்தகத்தில் ரெவ்லான் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தது. அதேபோல மும்பை சந்தையில் ரிலையன்ஸ் பங்கு 1.9 சதவீதம் உயர்ந்தது.
