ஆண்டு போனஸ், வருமான வரி ரீஃபண்ட் அல்லது எதிர்பாராத கூடுதல் வருமானம் கிடைக்கும்போது, அதை முதலீடு செய்யலாமா அல்லது ஹோம் லோன் போன்ற கடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே அடைக்கலாமா? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.
இந்த இரண்டுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த உதவும் எளிய நிதி உத்திதான் 50-50 ஃபார்முலா. இது ஒரே நேரத்தில் கடன் சுமையையும் குறைத்து, எதிர்கால செல்வ உருவாக்கத்திற்கும் வழிவகுக்கும்.
என்ன இந்த 50-50 ஃபார்முலா?
இந்த முறையின்படி, உங்களுக்குக் கிடைக்கும் போனஸ் அல்லது கூடுதல் தொகையில் 50% பணத்தை கடனை முன்கூட்டியே அடைக்கவும், மீதமுள்ள 50% பணத்தை SIP அல்லது பிற முதலீடுகளில் செலுத்தவும் வேண்டும்.
உதாரணமாக, ₹2 லட்சம் போனஸ் கிடைத்தால், ₹1 லட்சத்தை ஹோம் லோன் முன்பணம் செலுத்தவும், மீதமுள்ள ₹1 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்ட் SIP அல்லது பிற நீண்டகால முதலீட்டில் செலுத்தலாம். இதன் மூலம் கடனின் வட்டிச் சுமையும் குறையும், அதே நேரத்தில் முதலீடும் தொடர்ந்து வளரும்.
எப்போது இந்த உத்தி பயனளிக்கும்?
ஹோம் லோனின் ஆரம்ப ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் EMI-யில் பெரும்பகுதி வட்டிக்கே செல்கிறது. எனவே அந்தக் காலகட்டத்தில் முன்கூட்டியே ஒரு பகுதியைச் செலுத்தினால், மொத்த வட்டிச் செலவில் கணிசமான சேமிப்பு கிடைக்கும்.
அதே நேரத்தில், நீண்டகாலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் கடன் வட்டியை விட அதிக வருமானத்தை வழங்கும் வாய்ப்பும் உள்ளது. அதனால், கடனை மட்டும் அடைப்பதோ அல்லது முதலீட்டை மட்டும் செய்வதோ அல்லாமல், இரண்டையும் சமநிலையுடன் மேற்கொள்வதே இந்த 50-50 ஃபார்முலாவின் நோக்கமாகும்.
முதலீட்டை எப்படி தொடங்கலாம்?
நிபுணர்கள் கூறுவதன்படி, பெரிய தொகையை ஒரே நேரத்தில் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, முதலில் லிக்விட் ஃபண்டில் நிறுத்தி, பின்னர் SIP அல்லது STP (Systematic Transfer Plan) மூலம் படிப்படியாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாற்றலாம்.
இதனால் சந்தை ஏற்றத்தாழ்வு அபாயத்தை ஓரளவு குறைத்து, நீண்டகாலத்தில் கூட்டு வட்டியின் பலனையும் பெற முடியும். இருப்பினும், உங்கள் கடன் வட்டி விகிதம், முதலீட்டு இலக்கு மற்றும் அபாயத்தை ஏற்கும் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்து இந்த உத்தியைப் பயன்படுத்துவது நல்லது.
