2026 பட்ஜெட் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், பழைய மற்றும் புதிய வருமான வரி முறைகள் (New Tax Regime) பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர், பழைய முறையில் கிடைக்கும் அதிக வரி விலக்குகளுக்கும், புதிய முறையில் உள்ள எளிமையான, குறைவான வரி விகிதங்களுக்கும் இடையே உள்ள நன்மைகளை ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர். பலர் இன்னும் தங்கள் முடிவை எடுக்கவில்லை. வரி திட்டமிடலை அனைத்து வருமானப் பிரிவினருக்கும் நியாயமாகவும், தெளிவாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்ற அரசு சில மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வரி விதிப்பு முறை!
புதிய வரி விதிப்பு முறையில் 2025 பட்ஜெட்டில் ஸ்டாண்டர்ட் டிடக்சன் (Standard Deduction) எனப்படும் நிலையான கழிவுத் தொகை ரூ.50,000 இலிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது. இதனால், சம்பளம் வாங்குபவர்களுக்கு வரி இல்லாத வருமான வரம்பு ரூ.12.75 லட்சம் வரை அதிகரித்துள்ளது. இந்தத் தொகை மேலும் உயர்த்தப்பட்டால், அதன் பலன்கள் புதிய முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை மேலும் அதிகரிக்கும்.
பழைய வரி விதிப்பு முறையை திடீரென ரத்து செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றே தெரிகிறது. மாறாக, புதிய முறையை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதன் மூலம், வரி செலுத்துவோரை படிப்படியாக புதிய முறைக்கு மாற ஊக்குவிக்கும் உத்தியை அரசு கையாள்கிறது. கட்டாயப்படுத்தி மாற்றுவதற்குப் பதிலாக, எளிதாக மாறுவதற்கு அரசு சில சலுகைகளை வழங்கலாம். புதிய முறையில் ஸ்டாண்டர்ட் டிடக்சனை அதிகரிப்பது, திருமணமான தம்பதிகளுக்கு கூட்டாக வரி தாக்கல் செய்யும் வசதி மற்றும் மருத்துவச் செலவுகள் அல்லது பிற குறிப்பிட்ட தேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட வரி விலக்குகளை மீண்டும் கொண்டு வருவது போன்ற சலுகைகள் இதில் அடங்கும்.
புதிய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துவோருக்கு, வருமானத்தின் அடிப்படையில் வெவ்வேறு விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.
தற்போதைய வரி விகிதங்கள்:
- ரூ.4,00,000 வரை – வரி இல்லை
- ரூ.4,00,001 முதல் ரூ.8,00,000 வரை – 5%
- ரூ.8,00,001 முதல் ரூ.12,00,000 வரை – 10%
- ரூ.12,00,001 முதல் ரூ.16,00,000 வரை – 15%
- ரூ.16,00,001 முதல் ரூ.20,00,000 வரை – 20%
- ரூ.20,00,001 முதல் ரூ.24,00,000 வரை – 25%
- ரூ.24,00,000 க்கு மேல் – 30%
இந்த முறையில் வருமானம் அதிகரிக்கும்போது வரி விகிதங்களும் படிப்படியாக அதிகரிக்கின்றன. பழைய முறையை விட ஆரம்ப வரி விகிதங்கள் குறைவாக இருந்தாலும், இதில் கிடைக்கும் விலக்குகள் குறைவுதான்.
சம்பளம் வாங்கும் குடும்பங்களின் நிலை?
பணவீக்கம் காரணமாக குடும்ப செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்டாண்டர்ட் டிடக்சன் உயர்த்டப்பட்டால் அது சம்பளம் வாங்கும் குடும்பங்களுக்கு ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதிக விலக்குகள் என்றால் குறைவான வரிக்குட்பட்ட வருமானம், அதாவது கையில் அதிக பணம் இருக்கும். பெரிய மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக இந்த பட்ஜெட் புதிய வரி விதிப்பு முறையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
