தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் களைகட்டியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 3) தமிழ்நாடு வருகிறார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று மாலை தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அஜந்தா சிக்னல் சந்திப்பு, அண்ணா சாலை மற்றும் அண்ணா திடல் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் அவர், என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். பின்னர் மீண்டும் சென்னை திரும்பும் பிரதமர் மோடி, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று இரவு தங்க உள்ளார். அப்போது தேர்தல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அது குறித்து ஆலோசனை நடத்தவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 3,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிண்டி முதல் மீனம்பாக்கம் வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை கேரளாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
