தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
ஆமாம். மகாகவி பாரதியாரின் வரிகள்தாம். இன்று அவரின் நினைவுநாளும்கூட. பாரதி கூறியதைப்போன்றுதான் இன்று பலரும் வேடிக்கை மனிதர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி, தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார் பாரதியார்.
ஆனால், மேற்கூறிய அனைத்தும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்களில் ஷேர் செய்வதில்தான் இருக்கிறது. உண்மைதானே. (களத்தில் இறங்கி போராடும் நல்லுள்ளங்களுக்கு தனிப்பட்ட வணக்கங்கள்)
பெண்ணுரிமை, சாதிப் பிரச்னைகளுக்காகப் போராடி பல இன்னல்களை சந்தித்த பாரதியாரைப் பற்றி பத்தாம் வகுப்பில் கட்டுரை எழுதி முதல்பரிசு வாங்கிவிட்டு, இன்று பல சாதிகளை முன்னிறுத்தியே தூண்டுதலாக இருக்கின்றனர்.

தத்தம் குழந்தைகளுக்கு மாறுவேட போட்டியில் பாரதி வேடமிட்டு மகிழும் பெரும்பாலான பெற்றோர்கள் உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து வேடமிட்டே வலம் வருகின்றனர்.
“கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் இதெல்லாம் நான் படிச்சிருக்கேன், ஒவ்வொரு பக்கமும் எனக்கு அத்துபடி” என பெருமை சாற்றிக்கொள்ளும் சிலர் தன் பிள்ளைகளுக்கு “பீலே” என பெயரிட்டு ஆங்கில கான்வென்ட்டில் படிக்க வைத்து, பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பாரதியார் கவிதைகளைப் பாடச்சொல்லிய பாட்டிகளும் இல்லை, விடுமுறை நாள்களும் இனி இல்லை. ஆங்காங்கே, வாழும் சில தமிழ் நல்லுள்ளங்களின் கருணையால் தமிழும், கவியும், புலமையும், பாரதியும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
யானையால் தாக்கப்பட்ட பாரதியைப்போன்று, நிகழ்கால / எதிர்கால சந்ததியினரின் உள்ளத்தில் தமிழை வீழ்த்திவிடாமல் காத்திடுவோம்.
பல வேடிக்கை மனிதரைப்போல நாமும் வீழாமல், பலரையும் வாழ வைத்து நாமும் வாழ்ந்திடுவோம்!
– கிரேஸி கோபால்
