தமிழகத்தை வறட்சி தன் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், பால் தொழில் வாயிலாக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். அதேவேளையில், பாலில் கலப்படம் என்ற மிகப்பெரிய பிரச்னை தற்போது உருவெடுத்துள்ளது. அதுகுறித்தும் தமிழக பால் வளத்துறை அமைச்சர் தனியார் பால் நிறுவனங்கள் குறித்துப் பேசியது குறித்து ஹட்சன் ஆக்ரோ புராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியை இங்கு காணலாம்.
**வறட்சியால் பால் உற்பத்தித்துறை பாதித்துள்ளதா?**
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவிய கடும் வறட்சியானது வேளாண் தொழிலைக் கடுமையாகப் பாதித்துள்ளது. எனினும், பால் உற்பத்தித்துறையில் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. விவசாயம் பொய்த்துப் போகும்போது, விவசாயிகள் வளர்க்கும் மாடுகள் பால் மூலமாக வருவாயை ஈட்டித் தருகின்றன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. எனவே, வறட்சி காலங்களில்கூட விவசாயத்தைவிட பால் உற்பத்தி மிகச்சிறந்த ஒரு தொழிலாக இருக்கிறது.
**பால் உற்பத்தியானது விவசாயிகளுக்கு இரண்டாம்பட்ச தொழிலாகவே இருக்கிறது. அது எந்தளவுக்கு ஆதரவாக உள்ளது?**
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தினசரி 2 லட்சம் லிட்டர் அளவிலான பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 40 சதவிகிதம் அல்லது 80 லட்சம் லிட்டர் அளவிலான பாலானது ஆவின் உள்ளிட்ட அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் கையாளப்படுகின்றன. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், தினமும் ரூ.55 அல்லது ஆண்டுக்கு ரூ.18,250 கோடி விவசாயி ஒருவருக்கு வருமானமாகக் கிடைக்கிறது. இந்தத் தொகையானது விவசாய அறுவடையில் கிடைக்கும் தொகையைவிட மிக அதிகமாகும். மேலும், பால் விலையானது நிலையாக இருப்பதால் இத்தொழிலில் உறுதியான வருவாய் கிடைப்பதோடு, பத்து நாள்களுக்கு ஒருமுறை பணம் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.
**உங்களைப் போன்ற கார்பரேட் நிறுவனங்களுக்கும் அரசின் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன?**
கடந்த 70 ஆண்டுகளாகவே கூட்டுறவு நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளன. ஆனால், தனியார் நிறுவனங்கள் இதில் நுழைந்து இருபது வருடங்கள் மட்டுமே ஆகிறது. ஆனால், தற்போதைய நிலையில் இத்துறையில் தனியார் நிறுவனங்கள் 52 சதவிகிதப் பங்குகளையும், கூட்டுறவு நிறுவனங்கள் 48 சதவிகிதப் பங்குகளையும் மட்டுமே கொண்டுள்ளன. இதில், குஜராத்தின் அமுல் மற்றும் கர்நாடகாவின் நந்தினி ஆகிய இரு கூட்டுறவு நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கும் மேலான பங்குகளை தங்களது வசம் வைத்துள்ளன. தமிழகத்தில் மட்டும் தினசரி 30 லட்சம் லிட்டர் அளவிலான பாலை ஆவின் நிறுவனம் கையாளுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் தினசரி 50 லட்சம் லிட்டர் பாலைக் கையாளுகின்றன. எங்களது ஹட்சன் நிறுவனம் மட்டும் தினசரி 28 முதல் 33 லட்சம் லிட்டர் அளவிலான பாலைக் கையாளுகிறது.
**கார்பரேட் பால் நிறுவனங்களுக்கு கூட்டுறவுத்துறை உதவியுள்ளதா??**
இல்லை. எங்களைப் போன்ற கார்பரேட் நிறுவனங்கள்தான் முறைசார் துறைக்கு பெருமளவில் உதவியுள்ளோம். முறைசாரா துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை முறைசார் துறைக்கு நாங்கள் எடுத்துச் சென்றுள்ளோம். தனியார் பால் உற்பத்தித்துறைக்கு அரசு எவ்வித உதவியும் புரியவில்லை. ஆரம்பகட்ட கொள்கைகள் தவிர்த்து வேறு எந்த உதவியும் அரசு செய்துதரவில்லை.
**ஹட்சன் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால் உற்பத்தி நிறுவனமாக உயர்ந்துள்ளதே…**
இந்த ஆண்டின் முடிவில் எங்களது ஒட்டுமொத்த பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 45 லட்சம் லிட்டராக உயர்ந்துவிடும்.
**எனில், ஆவினைவிட உங்களது நிறுவனம் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிக உற்பத்தியைக் கொண்டிருக்குமே?**
ஆம். உண்மைதான்.
**உங்களது வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்த காரணிகள் என்ன?**
எங்களது ஹட்சன் நிறுவனமானது விவசாயிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. பால் கொள்முதல், செயல்படுத்துதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடும் வளர்ச்சிக்கான காரணிகளாகும். எங்களது நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே பாலை கொள்முதல் செய்கிறது. மேலும், அவர்களுக்கான கூலி அல்லது தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. எனவே, இதில் இடைத்தரகர்களால் சுரண்டல் போன்ற எவ்வித பிரச்னைகளும் இருக்காது.
**பால் உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பு குறித்து கூறுங்களேன்…**
எங்களது ஹட்சன் நிறுவனம் மட்டும் தனியே 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இத்துறையில் 10,000 பால் உற்பத்தி மையங்களில் ஒவ்வொரு மையத்துக்கும் இருவர் தேவைப்படுகிறார்கள். 3,500 பால் விநியோக மையங்களில் சுமார் 50,000 பேர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். எங்களது நிறுவனம் தவிர்த்து பிற தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் மட்டும் சுமார் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
**இந்தச் சூழலில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து ஏற்புடையதா?**
அவரது கருத்துகள் அனைத்தும் ஆதாரமற்றவையாக இருந்தன. பாலில் கலப்படம் குறித்து அவருடன் இணைந்து பணியாற்றுபவர்கள் அவரைத் தவறாக வழிநடத்தியிருக்கலாம். அவர் முதலில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் பாலில் கலப்படம் செய்கின்றன என்று கூறினார். பின்னர் ஒரு சில நிறுவனங்கள் தவிர்த்து மற்ற அனைத்து நிறுவனங்களும் கலப்படம் செய்வதாகக் கூறினார். பின்னர் இறுதியில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே கலப்படத்தில் ஈடுபட்டதாகக் கூறினார். கலப்படம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், முறைசார் துறையைச் சேர்ந்த தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களின் பாலில் கலப்படம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
**இதிலிருந்து தமிழ்நாட்டில் பாலில் கலப்படமே இல்லை என்று கூறலாமா?
பொதுவாகப் பாலை இருப்பு வைக்கும்போது அது கெட்டுப்போகாமல் இருக்க அதில் ரசாயனம் கலப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில், பாலைக் குளிரூட்டுவதற்கான உள்கட்டுமான வசதிகள் சிறப்பாகவே உள்ளன. முதலில் பாலைக் கொள்முதல் செய்தவுடன் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை அதைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதேபோல பால் விநியோகத்தின் போதும் அதன் வெப்பநிலை மிக முக்கியமான ஒன்று. சில மாநிலங்களில் பால் கெட்டுப்போகும் சூழல் இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. எங்களது நிறுவனத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் குளிரூட்டும் வசதிகொண்ட வாகனங்களை நாங்கள் முதன்முதலாகக் கூட்டுறவு நிறுவனங்களுக்கு முன்பாகவே அறிமுகம் செய்துவிட்டோம். இதனால் எங்களது வாடிக்கையாளர்களுக்குத் தரமான பாலை விநியோகிக்கிறோம்.
**பால்வளத்துறை அமைச்சர் கூறியதுபோல, இந்தியா முழுவதுக்கும் தேவையான பாலை ஆவின் வழங்க இயலுமா?**
ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விற்பனை 22 லட்சம் லிட்டராக உள்ளது. அதிகபட்ச கொள்முதல் அளவு 31 லட்சம் லிட்டராகவும் சராசரி கொள்முதல் அளவு 28 லட்சம் லிட்டராகவும் உள்ளது. எனவே, இதில் 22 லட்சம் லிட்டர் போக மீதமுள்ள 6 லட்சம் லிட்டர் பாலானது பால் பவுடர், நெய் உள்ளிட்ட பிற பொருள்கள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, தனியார் நிறுவனங்களின் தற்போதைய பால் விநியோக அளவான 50 லட்சம் லிட்டரை ஆவின் நிறுவனத்தால் நெருங்கவே இயலாது. தரத்தை எடுத்துக்கொண்டால் எங்களது நிறுவனத்தின் ஆரோக்கியா பாலை உதாரணமாக என்னால் கூறமுடியும். அது சர்வதேசத் தரத்தில் உள்ளது. எனவே, ஆவின் உள்ளிட்ட எந்தவொரு பிராண்டின் தரத்தையும்விட ஆரோக்கியா பால் தரமிக்கது. பால் இறக்குமதியில் அதிக கட்டுப்பாடுகளைக் கொண்ட சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எங்களது ஹட்சன் பால் ஏற்றுமதியாகிறது என்றால் அதன் தரத்துக்கு வேறு உதாரணம் கூற இயலாது.
நன்றி: [தி இந்து](http://www.thehindubusinessline.com/economy/agri-business/tn-dairy-ministers-comments-are-hurting-farmers-and-the-dairy-industry-hatsun-cmd/article9747233.ece)
தமிழில்: [செந்தில் குமரன்](https://www.facebook.com/Senthilhardy)�,