ரயில் : விமர்சனம்!

Published On:

| By christopher

கவரும் சில காட்சிகள்!

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, ‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சித் தொடரின் வசனகர்த்தாவாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ‘நான் மகான் அல்ல’, ‘எம்டன் மகன்’ போன்ற படங்களுக்கும் அவர் வசனம் அமைத்திருக்கிறார். அவரது கைவண்ணத்தில் அமைந்த ‘அழகர்சாமியின் குதிரை’, சுசீந்திரனால் இயக்கப்பட்டு படமாகவும் உருப்பெற்றது. அப்படியொருவர் தானே எழுதி இயக்கினால் அப்படம் எப்படியிருக்கும்? ‘ரயில்’ படத்தின் மீது நாம் கொண்ட எதிர்பார்ப்பு அத்தகையதுதான்.

சரி, அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா ‘ரயில்’?

மிகச்சிறிய பரப்பு!

மதுரை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தில் முத்தையா – செல்லம்மா (குங்குமராஜ், வைரமாலா) தம்பதி வாழ்ந்து வருகின்றனர். செல்லம்மாவின் தந்தை கொஞ்சம் வசதி படைத்தவர். ஆனாலும், மருமகனின் குடிப்பழக்கமும் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றும் குணமும் அவரை எரிச்சல்படுத்துகிறது. அது போதாதென்று, அவ்வப்போது மது அருந்தப் பணமும் கேட்கிறார் முத்தையா.

இந்த நிலையில், அவர்கள் இருக்கும் வீட்டின் எதிரே சுனில் (பர்வேஸ் மஹரூ) என்ற வடநாட்டு இளைஞர் குடி வருகிறார். அவரது பெற்றோர், மனைவி, மகள் மும்பையில் இருக்கின்றனர். இங்குள்ள ஆலையொன்றில் பணியாற்றும் அவர் ’தானுண்டு தனது வேலையுண்டு’ என்றிருக்கிறார். குடும்பப் பொறுப்பை உணர்ந்து வாழ்கிறார்.

அது செல்லம்மாவை ஈர்க்கிறது. சுனிலைத் தனது சகோதரனாகப் பாவிக்கிறார் செல்லம்மா. ஆனாலும், முத்தையாவின் மனதில் சுனில் மீது பொறாமையும் வன்மமும் பெருகுகிறது.

ஒருநாள் செல்லம்மாவுக்கும் முத்தையாவுக்கும் சண்டை முற்றுகிறது. அப்போது, முத்தையாவை அடிக்கவிடாமல் தடுக்கிறார் சுனில். அந்த சண்டைக்குப் பிறகு கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்குச் சென்றுவிடுகிறார் செல்லம்மா.

ஏற்கனவே சுனில் மீது கோபமாக இருக்கும் முத்தையா, அதன்பின் கொலை வெறியாகிறார். அதற்குத் தயாராகவும் செய்கிறார்.

இந்த நிலையில், அடுத்த நாள் காலையில் விபத்தில் அடிபட்டு சுனில் இறந்த தகவல் தெரிய வருகிறது. அவரது சடலமும் அந்த வீட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. அதனையறிந்து ஓடி வருகிறார் செல்லம்மா.

செல்லம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, அந்த ஊரில் இருப்பவர்களின் வழக்கத்திற்கு ஏற்ப சுனிலின் ஈமச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்கிறார் அவரது தந்தை. சுனிலின் குடும்பமும் மும்பையில் இருந்து வந்து, அதில் கலந்துகொள்கிறது. அங்கேயே தங்குகிறது.

இந்த நிலையில், சுனில் வங்கியில் இருந்து எடுத்துவந்த ஐந்து லட்ச ரூபாய் பணம் அடங்கிய பேக் காணாமல் போனதை உணர்கிறார் செல்லம்மா. அதனை எடுத்தது முத்தையாதான் என்று சந்தேகிக்கிறார்.

குடிக்கு அடிமையாகிக் குடும்பத்தினரிடம் இருந்தும், சுற்றத்தினரிடம் இருந்தும் விலகி நிற்கும் முத்தையா, சுனிலின் இறப்புக்குப் பிறகு மனம் மாறினாரா? அந்த பேக்கை எடுத்தது யார் என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘ரயில்’ படத்தின் மீதி.

இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் மிகக்குறைவு. கதை பேசும் விஷயமும் ஒற்றைத்தன்மை கொண்டது. அதனால், ஒட்டுமொத்தக் கதையின் பரப்பும் மிகச்சிறியதாகவே திரையில் தெரிகிறது.

இயக்குனரின் பார்வை!

நாயகன் குங்குமராஜ், நாயகி வைரமாலாவின் நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. படம் முழுக்க அவர்களது இருப்பே வியாபித்திருக்கிறது. அது சலிப்பை ஏற்படுத்தாத அளவுக்கு நடித்துள்ள இருவரும் புதுமுகங்கள் என்பது இன்னொரு ஆச்சர்யம்.

இந்த படத்தில் பர்வேஸ் மஹ்ரூ, பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா, வைரம் பாட்டி, செல்லம்மாவின் தந்தையாக நடித்தவர், சுனிலின் குடும்பத்தினராக வந்தவர்கள் உட்பட மிகச்சிலரே தலை காட்டியிருக்கின்றனர்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, இந்தப் படத்தில் நாடகத்தன்மையை முடிந்தவரை அகற்றப் பாடுபட்டிருக்கிறது.

தயாரிப்பு வடிவமைப்பாளர் அமரன், படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது நிலையில் இருந்து பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் எஸ்.ஜெ.ஜனனியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன. அதேநேரத்தில், பின்னணி இசை சட்டென்று நம்மைக் காட்சிகளோடு பிணைக்கவில்லை.

இந்த படத்தின் பட்ஜெட் குறைவு என்பது படம் தொடங்கிய சில நொடிகளிலேயே தெரிந்துவிடுகிறது. கடந்த ஆண்டு வெளியான ‘கிடா’ உட்படச் சில படங்கள் அப்படிப்பட்ட முயற்சிகளாகவே அமைந்தன. ஆனால், அவற்றில் இருந்த சுவாரஸ்யம் ‘ரயில்’ படத்தில் இல்லை. அதுவே இப்படத்தின் பலவீனம்.

’வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களால் இங்கிருப்பவர்களின் வேலைவாய்ப்பு பறி போகிறது’ எனும் பேச்சை இந்த படத்தின் முதல் பாதியில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

’வந்தேறி’ என்று அவர்களை அடிக்கோடிட்டுக் காட்ட, ‘வடக்கன்’ என்ற சொல்லையும் நிறைய இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். அந்த இடங்கள் ‘ம்யூட்’ செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய தணிக்கைத் துறையின் கெடுபிடிகளே அதற்குக் காரணம்.

அதனை முன்னரே படக்குழு உணர்ந்திருந்தால், சில குறைகளைச் சரி செய்திருக்கலாம். இந்த படத்தில், வடநாட்டில் இருந்து வந்தவர்கள் சாதாரண தொழிலாளர்களே என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

ஒருகாலத்தில் மும்பை போன்ற நகரங்களுக்குத் தமிழர்கள் பிழைக்கச் சென்றது போல, இன்று அவர்கள் தெற்கு நோக்கி வருவதாகச் சொல்கிறார் இயக்குனர்.

அதேநேரத்தில், இங்கிருக்கும் நடுத்தர வயதினர் மது போதைக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தையும் மன உறுதியையும் இழந்து வருகின்றனர் என்றும் சொல்கிறார்.

உண்மையைச் சொன்னால், இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு விஷயங்கள். அவற்றைச் சேர்த்துச் சொன்ன காரணத்தால், ‘ரயில்’ படம் பலவீனம் அடைந்திருக்கிறது.

அதுவே, இப்படம் குறித்து நாம் தேக்கி வைத்திருந்த எதிர்பார்ப்பையும் உடைத்தெறிகிறது. அது நிகழாமல் இருந்திருந்தால், இப்படம் அடைந்திருக்கும் உயரமே வேறு.

‘ரயில்’ படத்தில் மிகச்சில காட்சிகள் ‘சூப்பர்’ என்று சொல்லும் அளவுக்கு அமைந்துள்ளன. நாயகனிடம் சுனிலின் தந்தை தனது பேத்தியை வெளியே அழைத்துச் செல்லுமாறு சொல்வது அப்படியொன்று.

படத்தின் தொடக்கக் காட்சியே, மேற்குத்தொடர்ச்சி மலை பின்னணியில் தெரியத் தரையில் நாயகன் படுத்துக்கொண்டு பீடி குடிப்பதாக அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டு செல்வதும், இன்னொரு புறம் நாயகனை இரண்டு பேர் மது விருந்துக்கு அழைப்பதுமாக நகர்கிறது.

அந்த ஷாட்டில் இருந்த சுவாரஸ்யம் படம் முழுக்க அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பெருமூச்சு விடத்தான் வேண்டியிருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசங்கரன் பாடகலிங்கம்

’சென்னையில் மாடு வளர்க்க மீண்டும் தடை’ : தமிழக அரசுக்கு மாநகராட்சி கடிதம்!

”கள்ளச்சாராய விவகாரம்… ஒரு நபர் ஆணையத்தில் உண்மை வெளிவராது” – எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share