இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் வேலை உருவாக்கத்துக்கு உதவுவதற்காக உலக வங்கி (World Bank) 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு இந்த நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்தது.
தனியார் துறையில் வேலைவாய்ப்பு:
தனியார் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படுகிறது. அடுத்த இரண்டு தசாப்தங்களில் பணிக்கு வரவுள்ள சுமார் 11 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி நடைமுறைகளை எளிதாக்குதல், வர்த்தக ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட சமீபத்திய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
எப்படிப்பட்ட திட்டங்களுக்கு ஆதரவு?
தொழில்முனைவோருக்கான தடைகளைக் குறைத்தல், தொழிலாளர் சந்தையில் பங்கேற்பை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் வணிகங்களுக்கான மூலதன வசதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை ‘வளர்ச்சிக் கொள்கை நிதியுதவி’ (DPF) ஆதரிக்கிறது என்று உலக வங்கி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள்:
29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு விரிவான தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) அரசு 2025 நவம்பர் மாதம் செயல்படுத்தியது. விதிமுறைகளைப் பின்பற்றுவதை எளிதாக்குதல், காலாவதியான விதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு வணிகம் செய்வதற்கான திறமையான கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை இவற்றின் நோக்கங்களாகும்.
