விலைவாசி அதிகமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் மனதில் இருக்கும் பெரிய கேள்வி என்னவென்றால், வீட்டை வாடகைக்கு எடுப்பது புத்திசாலித்தனமானதா அல்லது ஒரு புதிய வீட்டை வாங்கி (Buy home or Rent) மாதத் தவணைகளைச் செலுத்துவது சிறந்த தேர்வாக இருக்குமா என்பதுதான். உயர்ந்து வரும் சொத்து விலைகள், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் அதிகரித்து வரும் தினசரி செலவுகள் ஆகியவை இந்த முடிவை எடுப்பதை மேலும் கடினமாக்குகின்றன.
மாத வாடகை 30,000 ரூபாய் என்பது குறைவாகத் தோன்றினாலும் 70,000 ரூபாய் மாதத் தவணை என்பது ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்ற கனவைத் தூண்டுகிறது. ஆனால், ஒரு வீட்டைச் சொந்தமாக்க வேண்டும் என்ற வெறும் ஆசை மட்டுமே இந்த முடிவை எடுக்கப் போதுமானதாக இருக்குமா? வீட்டை வாடகைக்கு எடுப்பதன் மிகப்பெரிய நன்மை அதன் நெகிழ்வுத்தன்மை ஆகும். உங்கள் வேலை அல்லது தேவைகளின் அடிப்படையில் நீங்கள் இடங்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். 30,000 ரூபாய் வாடகை என்பது மாதத் தவணையை விடக் குறைவுதான். இது மீதமுள்ள பணத்தை முதலீடு செய்யவோ அல்லது சேமிக்கவோ அனுமதிக்கிறது. மேலும், பராமரிப்பு மற்றும் சொத்து வரிகள் போன்ற பொறுப்புகளும் வீட்டு உரிமையாளரின் பொறுப்பிலேயே இருக்கும். எனவே மற்ற செலவுகள் நமக்கு இருக்காது.
மறுபுறம், புதிதாக ஒரு வீட்டை வாங்குவது ஒரு நிரந்தரச் சொத்தை உருவாக்குகிறது. 70,000 ரூபாய் மாதத் தவணை அதிகமாகத் தோன்றினாலும், அது நீண்ட காலத்திற்கு உங்கள் செல்வத்தை அதிகரிக்கும் ஒரு முதலீடாகும். மேலும், வாடகை குறித்த நிச்சயமற்ற தன்மையிலிருந்து விடுபட்டு, சொந்த வீட்டின் பாதுகாப்பையும் நீங்கள் உணரலாம்.
மாதத் தவணைகள் உங்கள் வருமானத்தில் 30 முதல் 40 சதவீதத்தைத் தாண்டினால் அவை உங்கள் பட்ஜெட்டிற்கு ஒரு பெரும் சுமையாக அமையலாம். இருப்பினும், குறைந்த வாடகையானது சேமிப்பு மற்றும் முதலீடுகள் மூலம் சிறந்த வருமானத்தை அடைய உங்களுக்கு உதவும். ஆனால் சொத்து மதிப்பு உயர்வின் நீண்ட கால நன்மைகளும் மறுக்க முடியாதவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாடகை வீட்டில் இருப்பதா அல்லது சொந்த வீடு வாங்குவதா என்பது முழுக்க முழுக்க உங்கள் வருமானம், வேலையின் நிலைத்தன்மை மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் பொறுத்தது. நீங்கள் நீண்ட காலம் ஒரே நகரத்தில் தங்கி நிலையான வருமானம் பெறத் திட்டமிட்டால், சொந்த வீடு வாங்குவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் நெகிழ்வுத்தன்மையை விரும்பி, மற்ற முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் வாடகைக்கு இருப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம். முடிவு உங்கள் கையில்.
