2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளைக் கேட்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். We’ll Demand More Seats in 2026 Elections: VCK Stays in DMK Alliance
புதிய தலைமுறை டிவி சேனலுக்கு வன்னி அரசு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக கூட்டணியில் விசிக 15 தொகுதிகளைக் கேட்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அவரது கருத்து. திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையே இன்னமும் தொடங்கவில்லை. ஆகையால் நயினார் நாகேந்திரனுக்கு இந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது? என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்; அதன் பின்னர்தான் தொகுதிகள் பற்றி பேச முடியும். விசிக 15 தொகுதிகள்தான் கேட்டதாக ஏன் குறைவாக சொல்ல வேண்டும்? விசிக கூடுதலாக கேட்டதாக கூட சொல்லி இருக்கலாமே? 15 தொகுதிகளை மட்டும் விசிக கேட்டதாக நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதே எங்களை குறைத்து மதிப்பிடுகிறார் என்பதாகத்தான் பார்க்கிறேன்.
திமுக கூட்டணியில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் மட்டுமே விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கக் கூடியதுதான். அதனால் இந்த முறை கூடுதலாக தொகுதி கேட்பது என்பது எல்லோருடைய விருப்பமும்தான். இதை நாங்கள் எங்கள் தலைவர் திருமாவளவனிடம் சொல்வோம்.
திமுக கூட்டணியில் நாங்கள் 50 தொகுதிகள் கூட கேட்போம்.. 100 இடத்தில் கூட நிற்கனும் என கேட்போம். ஆனால் திருமாவளவன், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச வேண்டும்; அதன் பின்னர் முடிவு எடுத்து அறிவிப்பார்கள். இப்போதைக்கு எங்கள் ஆசையைத்தான் நாங்கள் சொல்கிறோம். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்தார்.