திருவள்ளூர் தனுஷ்- தேனி விஜயா ஶ்ரீ விவகாரத்தில் தமக்கு எந்த ஒரு தொடர்புமே இல்லை என பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார். “I Have No Connection to the Love Couple Controversy” – Minister Murthy Denies Involvement
காதல் திருமணம் செய்த தனுஷ்- விஜயா ஶ்ரீ ஜோடியை பிரிக்க முயன்ற விவகாரத்தில் சிறுவன் இந்திரசந்த் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை சென்னை உயர்நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டது. திருவள்ளூர் போலீசார் ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தி வீட்டுக்கு அனுப்பினர். பின்னர் ஏடிஜிபி ஜெயராமை தமிழக அரசு சஸ்பென்ட் செய்தது.
தம்மை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார் ஏடிஜிபி ஜெயராம். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் கைது உத்தரவை ரத்து செய்து கடிந்தும் கொண்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, சிபிசிஐடி விசாரிக்க இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பென்ட் தொடர்பாக தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து சிறுவன் கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ட் உத்தரவு திரும்பப் பெறப்படலாம்; இதனையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்கக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
கடந்த ஜூன் 18-ந் தேதி நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், “சிறுவன் கடத்தல் சம்பவம்: ஓபிஎஸ், அமைச்சர் மூர்த்திக்கு என்ன தொடர்பு? ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் சிக்கியது எப்படி?” என எழுதி இருந்தோம்.
இது தொடர்பாக மின்னம்பலத்திடம் பேசிய பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, “காதல் ஜோடி விவகாரத்தில் நான் தலையிடவே இல்லை, திருவள்ளூர் எஸ்பி சீனிவாசப் பெருமாளை தொடர்பு கொண்டு பேசவும் இல்லை; இந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை” என மறுப்பு தெரிவித்தார்.