}உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை தாங்களே பேசி தீர்த்துக்கொண்டனர் என்று இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் உள்ளிட்ட நால்வரும் நீதித்துறை வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த 12ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியில்லை என்றும் தெரிவித்திருந்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவர இந்திய பார்கவுன்சில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவையும் மற்ற நான்கு நீதிபதிகளையும் சந்தித்து பேசியது. இதனிடையே உச்ச நீதிமன்ற நான்கு நீதிபதிகளும் வழக்கம் போல் இன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று ( ஜனவரி 15) செய்தியாளர்களை சந்தித்த இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்குள் பேசி பிரச்சனையை தீர்த்துக் கொண்டனர். நீதிபதிகளின் அதிருப்தியை யாரும் அரசியலாக்க விரும்பவில்லை, உச்சநீதிமன்ற நிர்வாகம் வெளிப்படையாகவே நடைபெறுகிறது” என்று கூறினார்.,”
