போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது… பிரபலங்கள் கருத்து!

Published On:

| By christopher

vanathi seeman vijay antony on srikanth arrest

போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.. அவரை தொடர்ந்து இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட நடிகர் கிருஷ்ணாவிடமும் போலீசார் இன்று (ஜூன் 25) விசாரணை நடத்தி வருகின்றனர். vanathi seeman vijay antony on srikanth arrest

இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.

போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்!

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் தலை தூக்கி இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் அதன் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்குமே அதைப் பற்றிய கவலை இருக்கிறது. அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதைத் தாண்டி இதற்கு என்று தனியாக, அமைப்புகள் இருந்தாலும் கூட, அவர்கள் மத்திய அரசுடன் நெருக்கமான உறவுடன் இந்த போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்றார்.

அதே போன்று வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ள மாரீசன் படத்தின் ப்ரொமோசன் நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் ஆண்டனி நேற்று மதுரை சென்றிருந்தார்.

நீண்ட நாளாக இந்த பழக்கம் உள்ளது!

அப்போது அவரிடம் ஸ்ரீகாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “சினிமா துறையில் நீண்ட நாளாகவே போதைப் பொருள் புழக்கம் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பயன்பாடு” என்றார்.

மேலும் அவர், ”போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது, விசாரணை நடைபெற்று வருகிறது. அதுதொடர்பாக நீதிமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று பதிலளித்தார்.

ஸ்ரீகாந்த் ரொம்ப பாவம்!

அதேபோன்று மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை நன்றாக தெரியும். ரொம்ப பாவம் அவர். இது என் கருத்து. திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். புகழ்பெற்றவர்கள் கூட பயன்படுத்துகிறார்கள். அவர் தெரியாமல் சிக்கிக்கொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்.

அதிகாரங்களுக்கு தெரியாமல் இந்த போதைப்பொருள் வராது. திரையுலகில் மட்டுமல்ல, கல்லூரி, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்களில் கூட கஞ்சா, கொகைன், அபின் போன்ற போதைப்பொருட்கள் நீண்ட நாட்களாக விற்கப்படுகின்றன. அரசு நினைத்தால், போதைப்பொருள் ஒழிக்கப்படும்.
ஸ்ரீகாந்த் புகழ் பெற்ற நடிகர் என்பதால், அந்த செய்தி வெளியாகி வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. நடிகர் கைதானதால், போதைப்பொருள் ஒழிந்துவிட போகிறதா?” என சீமான் கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share