அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. usa warning to indian students for illegal entry
இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் இன்று (ஜூன் 10) தங்களது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்கா சட்டபூர்வமான பயணிகளை எப்போதும் வரவேற்கிறது. ஆனால், அமெரிக்கா வருவது ஒரு உரிமை அல்ல. சட்டவிரோத நுழைவு, வீசா முறைகேடு, அல்லது அமெரிக்க சட்டங்களை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தது.

அமெரிக்கா செல்ல முயன்ற ஒரு இந்திய மாணவர், நியூ ஜெர்சி மாநிலத்தின் நியூவார்க் விமான நிலையத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய பின்னர், அமெரிக்க தூதரகம் இந்தக் கருத்தை வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம், “நியூவர்க் விமான நிலையத்தில் ஒரு இந்தியர் சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்ற சமூக ஊடக செய்திகள் வந்துள்ளன. நாம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, இந்தாண்டு ஜனவரிக்கு பிறகு அதாவது டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின்னர், இதுவரை 1,080 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 கல்வியாண்டில், 11 லட்சம் சர்வதேச மாணவர்களில், 3.32 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.