”தனியார்‌ நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம்‌ மாநில அரசிற்கு இல்லையா?” – மநீம கேள்வி

Published On:

| By christopher

தொலைக்காட்சி நடத்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம் மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு இல்லையா? என்று மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக நல ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பறிக்கப்படும் மாநில அரசின்‌ அதிகாரம்!

இந்நிலையில் மத்திய அரசின் இந்த ஏதேச்சதிராக போக்கிற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் “காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும்‌ தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும்‌ மத்திய அரசிடம்‌, அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும்‌ சரியான வழி என்று மக்கள்‌ நீதி மய்யம்‌ மாநில சுயாட்சியை வலியுறுத்தி வருகிறது.

மாநில சுயாட்சி மட்டுமின்றி அதற்கு அடுத்த நிலையாக கிராமங்களுக்கு உள்ளாட்சியில்‌ தன்னாட்சி வேண்டுமென மக்கள்‌ நீதி மய்யம்‌ கேட்டுக்கொண்டிருக்கும்‌ நிலையில்‌, மத்திய அரசு இப்போது தொலைக்காட்சி நடத்தும்‌ அதிகாரம்‌ தனக்கு கீழ்வரும்‌ பிரச்சார்‌ பாரதி நிறுவனத்துக்கே உண்டு என்று அறிவித்திருக்கிறது.

இது மாநில அரசின்‌ அதிகாரத்தை பறிக்கும்‌ செயல்‌ என்பதால்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ இதை வன்மையாக கண்டிக்கிறது. இதனால்‌ ஏற்கனவே மாநில அரசால்‌ நடத்தப்படும்‌ கல்வித்தொலைக்காட்சி தடைபடும்‌ ஆபத்து இருப்பதை மக்கள்‌ நீதி மய்யம்‌ கவலையோடு பார்க்கிறது.

தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்!

ஒரு தனியார்‌ நிறுவனத்திற்கு தொலைக்காட்சி நடத்த அதிகாரம்‌ இருக்கும்‌ நாட்டில்‌ மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு அந்த அதிகாரம்‌ இல்லை
என்பது கேலிக்கூத்தான ஒன்றாகும்‌.

மாநில அரசு என்பது மத்திய அரசை அண்டி வாழும்‌ அரசாக இருக்க வேண்டும்‌ என்ற நினைப்பை உடனடியாக மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்‌.

இதை மெளனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல்‌ நம்‌ தமிழக அரசு தன்‌ எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்‌. இந்த அரசு இருக்கும்‌ அதிகாரங்களையும்‌
பறிகொடுத்துவிட்டு ஏமாந்து நிற்ககூடாது என்று மக்கள்‌ நீதி மய்யம்‌ கேட்டுக்‌ கொள்கிறது.“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர்ஜெமா

காந்தாரா எதிரொலி: மாதம் ரூ.2000 வழங்கும் கர்நாடக அரசு!

குவிந்த ரெட் கார்டுகள்… வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அசீம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share