‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் காவல்துறையில் உள்ளவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 22) பெற்றுக்கொண்டார்.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது காவல்துறையில் உள்ள குறைகளையும் முதல்வர் கேட்டுள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் “உங்கள் துறையில் முதல்வரின்” திட்டத்தின் கீழ் காவலர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பேண்ட் வாத்தியங்கள் முழங்க முதலமைச்சருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மற்றும் உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர். டிஜிபி சைலேந்திர பாபு, முதலமைச்சரை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று காவல்துறையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பேசினார்.
காவலர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற முதலமைச்சர் டிஜிபி அலுவலகத்தில் மகிழம் மரக்கன்று ஒன்றையும் நட்டார். சென்னையின் பாரம்பரியமிக்க அடையாளங்களில் இந்த டிஜிபி அலுவலகமும் ஒன்றாகும்.
மெரினா கடற்கரைக்கு எதிரே காமராஜர் சாலையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகமானது 1839 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
ஆரம்பத்தில் லாட்ஜாக இருந்த இந்தக் கட்டிடம், 1865 ஆம் ஆண்டில் காவல்துறையால் மாதத்திற்கு ரூ. 90 வாடகைக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது. 1874 ஆம் ஆண்டில், சென்னை பிரசிடென்சி காவல்துறை இந்த கட்டிடத்தை ரூ. 20,000 க்கு வாங்கியது.
உலகிலேயே சிறந்த காவல்துறையாக கருதப்படும் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக சொல்லப்படும் தமிழக காவலர்களின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்தில், முதலமைச்சராக பதவி வகிப்பவர்கள் மரம் நடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர்.
முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோரும் டிஜிபி அலுவலகத்தில் தங்கள் சார்பில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். எம்ஜிஆர் வைத்த மரம் வர்தா புயலின்போது விழுந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதேபோன்று, டிஜிபி அலுவலக வளாகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு காவல்துறையின் 150 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் மகிழம் மரக்கன்றை நட்டு அது இப்போது விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியும் டிஜிபி அலுவலகத்தில் மரம் நட்டார். அந்த வரிசையில் தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் தனது தந்தையைப் போலவே மகிழம் மரத்தை நட்டுச் சென்றுள்ளார்.
கலை.ரா
நாட்டின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் தமிழகத்தில்!
நெசவாளர்களுக்குக் கூடுதல் இலவச மின்சாரம் குறித்து பரிசீலனை: அமைச்சர் ஆர்.காந்தி