வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவி வரும் செய்தி தொடர்பாகப் பீகார் முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் தொலைப்பேசி வாயிலாகப் பேசியுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் திருப்பூர் மற்றும் கோவையில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இரண்டு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு,க. ஸ்டாலின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 4) ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார். பின்னர் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி செய்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்வார்கள்.
எப்போதும் வர்த்தகத்திற்காக -தொழிலுக்காக- மருத்துவத்துக்காக – கல்விக்காக – வேலைக்காக என பல்வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வருவது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழ்நாட்டையும் உயர்த்தி இருக்கிறார்கள். சமீப காலமாக வேலை வாய்ப்புகளைத் தேடி அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டிற்கு வருவது அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டிற்குச் சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வருவதற்குக் காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வருகை தரும் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது.
இப்படி வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம்.
இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு. சில குறு மதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது.
வேறு மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் சில வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு. தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப் போலப் பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது.
எனவே, ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
பீகார் மாநில முதலமைச்சர், எனது பெருமதிப்பிற்குரிய சகோதரர் நிதிஷ்குமாரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாகச் சொல்லி இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: டிஜிபி எச்சரிக்கை!
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ கஸ்டடி!
