”புத்தகம் தூக்க வேண்டிய வயதில் கத்தியை தூக்கும் நிலை”- தமிழிசை கவலை!

Published On:

| By Jegadeesh

Tamilisai Soundararajan expressed

புத்தகம் தூக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியை தூக்கும் நிலை இருப்பது வேதனை அளிக்கிறது  என்று தமிழிசை சௌந்தரராஜன் கவலை தெரிவித்துள்ளார்.

பனை தேசியத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை இன்று (ஆகஸ்ட் 12) சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பனைமரம் முழுவதும் பயன் தரும் அதனை பாதுகாக்க நாம் தவறி விட்டோம். தற்போது விதைத்தாலும் கூட அது வளர்ந்து பயன் தர பல ஆண்டுகள் ஆகும்.

அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை உருவாக்க நாம் நினைக்கிறோம். அவர்கள் அரிவாளை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்.

சாதிய வேற்றுமைகள் களையப்பட வேண்டும். புத்தகம் தூக்க வேண்டிய வயதில் கத்தியை தூக்குவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.

50 குடும்பங்கள் அந்த தெருவை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கும் தகவல்கள் கவலை அடைய செய்துள்ளது.

வேற்று மாநிலத்தை, வேறு ஊர்களை பற்றி கவலைப்படும் நமது அரசு, நமது மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்டு கொள்ள வேண்டும்.

காவல்துறை அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறி விட்டதோ என தோன்றுகிறது. அரசு சம்பவத்தில் தீர ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஓட்டுக்காக சாதியை பயன்படுத்துவது தவறானதாக அமையும்.

மற்ற மாநிலங்களை பார்ப்பதை விடுத்து சொந்த மாநிலத்தை பார்க்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,” காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தை கூட்டி விட்டு அதிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது திமுக அரசு.

கூட்டணியில் இருந்தும் அண்டை மாநில அரசின் ஒப்புதலை தமிழக அரசால் பெற முடியவில்லை. தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டுவர முடியவில்லை.

கர்நாடகத்தில் மாற்றுக் கட்சி ஆட்சியில் இருந்தபோது நடை பயணம் போராட்டம் என்ற நிலை எடுத்த தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என மிதமாக நடந்து கொள்கிறது.

செங்கோல் தமிழர்களின் பெருமை, அடையாளம், அதனை மதம் சார்ந்து பார்ப்பதில்லை.

தமிழகத்தில் 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 50,000 மாணவர்கள் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. அரசு இல்லாத இந்தி திணிப்பை பற்றி பேசுவதில் குறியாக உள்ளது.

ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது அரசின் சாதனைகளை பிரதமர் பேசுவது இயல்பு. மணிப்பூர் குறித்து பிரதமர் பேசும்போது எதிர்க்கட்சிகள் அவையில் இல்லை. அதைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை” என்று கூறினார்.

நெல்லை சரவணன்

”பொய் பேசும் நிர்மலா சீதாராமன்”- ஸ்டாலின் தாக்கு!

“தைரியமா இருங்க…” நாங்குநேரி மாணவனின் தாயுடன் ஸ்டாலின் செல்போன் பேச்சு!

நடிகர் தாமுவின் பேச்சு… கண் கலங்கிய பெண் காவலர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share