நா.மணி
மேய்ச்சல் எங்கள் தொழில். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், ஆடு தான் மேய்த்துக் கொண்டிருந்தேன். படங்களோடு ஒரு காகிதத்தைக் கண்டால், பரவசம் அடைவேன். அதில் என்ன இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.
என்றாவது ஒருநாள் நமக்குப் படிக்கத் தெரிந்தால், இந்தக் காகிதத்தில் இருப்பது, என்னவென்று படித்து, தெரிந்து கொள்ள வேண்டும், என்று தீர்மானித்து, அந்தக் காகிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வேன்.
எனக்குப் படிப்பில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, ‘உங்க பையனுக்கு படிப்புல நல்ல ஆர்வம். பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வையுங்க’ என்று என் தந்தையாரிடம் ஒருவர் சொன்னார்.
பதிலுக்கு அவர், ‘முதல்ல இப்ப படிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்களுக்கு வேலையை வாங்கி கொடுங்க பின்னர் இவனைப் படிக்க வைக்கிறேன், என்று வாயை அடைத்து விட்டார்.
அறிவொளி இயக்கமும் சரவணன் சாரும்
நாட்கள் நகர்ந்தன, அறிவொளி இயக்கம் வந்தது. மாலை நேரத்தில் சொல்லிக் கொடுக்க அறிவொளித் தொண்டராக எங்கள் ஊருக்கு வந்தார் சரவணன் சார். எங்கள் ஊர் மலை அடிவாரத்தில் இருக்கிறது. நல்ல ஏத்தம் சைக்கிளில் ஏறி, ஏறி, மிதித்துக் கொண்டு வருவார் எங்க ஊருக்கு வரும் அறிவொளி தரும் ஆசிரியர்.
வந்து இறங்கி சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, தொரத்தொர என்று ஒழுகும் வியர்வையை, கையால் வடித்து எறிவார். அந்த வியர்வை தான் நான் என்று அவர் கூறும் போது அவரது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
சில நிமிடங்கள் அங்கங்கள் அதிர்ந்து அடங்கியது. மீண்டும் பேசத் தொடங்கினார். அவர் கற்றுத் தந்த மாலை நேர அறிவொளியால் எழுத்தறிவு பெற்று, நன்கு எழுதப் படிக்க கற்றுக் கொண்டேன்.
ஆடு மேய்த்தது முதல் விமான நிலைய அதிகாரி வரை
‘புதிய கற்போர்’ என்ற சான்றிதழை, மாவட்ட ஆட்சித் தலைவர் கையொப்பத்தோடு பெற்றுக் கொண்டேன். அதனை வைத்து, எட்டாம் வகுப்புக்கு தனித்தேர்வராக விண்ணப்பித்து எழுதி தேர்வு பெற்றேன்.
பின்னர் பத்தாம் வகுப்புக்கும் தனித்தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்றேன். இதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டியில் உள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து தேர்ச்சி அடைந்தேன்.
இப்போது நான் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வேலை செய்கிறேன். ஐந்து மொழிகள் தெரியும். கை நிறைய சம்பளம் வாங்குகிறேன். என் வாழ்க்கை அறிவொளி இயக்கம் ஏற்றிய விளக்கு” என்று முடித்தார், அந்த அரங்கம் அதிர கைத்தட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது.
2015 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி, ஆம்பூரில் நடந்த அறிவொளி வெள்ளிவிழா மாநாட்டில் இந்த சாட்சியம் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தின் அறிவொளி மாநாட்டில், வேலூர் மாவட்டத்தின் அன்றைய ஆட்சியர் எம். பி. விஜயகுமார், அறிவொளி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முதல் அறிவொளி இயக்கத்தின் தொண்டர்கள் வரை இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநில அளவில் அறிவொளி இயக்கத்திற்கு பங்களிப்பு செய்தவர்களும் இதில் கலந்து கொண்டனர். அறிவொளி இயக்கத்தின் வழியாக தமிழகம் கற்றுக்கொடுத்த லட்சக்கணக்கான வயது வந்தோரில், மேற்படி சாட்சியமும் ஒன்று.
சர்வதேச எழுத்தறிவு தினம் 1966 ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், 1990 களில் தான் இந்தியாவில் மொத்த எழுத்தறிவு திட்டம் நடைமுறைக்கு வந்தது.
தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் என்னும் பெயரில் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது. 60 விழுக்காடு நிதியை மத்திய அரசும், 40 விழுக்காடு நிதியை மாநில அரசும் பங்களிப்பு செய்து நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டம் இது.
இத்திட்டத்தை தமிழ்நாட்டில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பு செய்தது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாதர்கள் ஆகியோர் இத்திட்டத்திற்கு பெரும் பங்களிப்பை செய்தனர்.
எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல், பேராசிரியர்கள் வரை இத்திட்டத்தில் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுத்தனர். குறிப்பாக,பெண்கள் பெரும் பங்களிப்பு செய்தனர். அறிவொளி நாடகங்கள், பாடல்கள் ஆகியவை புதிய கற்போரிடம் பெரும் தாக்கத்தையும் எழுச்சியையும் பெரும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
தமிழகத்தின் நகர்ப்புற வீதிகளிலும், கிராமங்களிலும் அறிவொளி தொண்டர்கள் உயிர்த் துடிப்போடு ஊர்வலம் வந்தனர்.
தாலாட்டு பாடல்களைக் கூட எழுத்தறிவு தாகத்தை ஊட்டும் வண்ணம் அறிவொளி இயக்கத்தினர் மாற்றி அமைத்தனர்.
தாலாட்டு பாடல்களைக் கூட அறிவொளி ஊட்டும் பாடல்களாக தகவமைத்துக் மக்களுக்கு கொடுத்தனர். உதாரணமாக கீழே ஓர் அறிவொளி பாடலைப் பாருங்கள்.
“குறிஞ்சி மலைத்தேனே! கொண்டாடும் சந்தனமே!
சரிந்து படுத்து இருக்கும்,
செண்பகமே கண்ணுறங்கு.
கண்ணுறங்கு ராசாவே!
கால் மொளச்ச பின்னாலே
ஒண்ணு ரெண்டு கத்துக் கொள்ள
ஓட வேணும் கண்ணுறங்கு.
ஆத்தா கத்துக்கல
அப்பன் கூட படிக்கவில்லை
பூத்த புது ரோசாவே
பொல்லாங்கத் தீத்திடடா!
உச்சத்து நிலவே நீ
ஒழுங்காப் படிக்க வேணும்
அச்சத்த விட்டுப் புட்டு
ஆளாகி நடக்க வேணும்.
நட்சத்திர பூப்பறிச்சு
நாதஸ்வர மேளம் வச்சு
அம்சங்கள் கற்றுக் கொள்ள
அனுப்பிடுவேன் கண்ணுறங்கு”
இப்படி வரிகளை மாற்றி அமைத்து, பாடிக் காட்டி எழுத்தறிவு தாகம் ஊட்டினர். “வந்தனம் ஐயா! வந்தனம், வந்த சனமெல்லாம் குந்தனும்’ என்ற நாட்டுப்புற பாடலில், ‘வண்டி ஓட்டும் கைகளே! “வளச்சி ‘ஆனா’ எழுதுங்க” என உணர்வு ஊட்டப்பட்டது. இப்படி நூற்றுக்கணக்கான பாடல்கள், நாடகங்கள். இரவு பகல் பாராது அறிவொளி தொண்டர்கள் எழுத்தறிவிக்கும் பைத்தியங்களாக, தமிழகம் எங்கும் அலைந்து திரிந்தனர்.

பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவொளி தொண்டர்களைப் போல் செயல்பட்டனர். அறிவொளி இயக்கத்தின் ஆன்மாவை புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் மாவட்டங்களில், அறிவொளி இயக்கத்தின் செயல்பாடுகள், பாய்ச்சல் வேகத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, காஞ்சிபுரம், வேலூர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்த ஆட்சியர்கள் அறிவொளியை பரப்புவதில் பெரும் பங்காற்றினர். அறிவொளியைப் பெற்ற கிராமப்புற பெண்களுக்கு அடுத்த கட்ட செயல்பாடாக ஆளுமை பண்புகளை வளர்த்தெடுத்தனர். வாழ்வாதாரத் திறன்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த குத்சியா காந்தி அவர்கள், தான் பணியில் இருந்து விடைபெற்று செல்லும் போது, தான் இறந்த பிறகு ‘இங்கு ஒரு அறிவொளி பைத்தியம் உறங்குகிறது’ என்று எழுதி வைக்கும்படி கூறுவேன் என்று சொல்லிச் சென்றார்.
அறிவொளி இயக்கம் முடிந்து 30 ஆண்டுகள் கடந்த பின்னும், அறிவொளி இயக்கம் பற்றி எல்லோருக்கும் தெரிகிறது. தமிழ் நாட்டில் அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் என்ன? என்று கேட்டால், வயது வந்தோர் அனைவரும் கற்றுக் கொண்டார்களோ இல்லையோ! தங்கள் பிள்ளைகளை பிச்சை எடுத்தேனும் படிக்க வைக்க வேண்டும், என்ற உணர்வு ஊட்டம் பெற்றார்கள்.
இன்று தமிழ்நாட்டின் உயர் கல்வி விகிதம் 54 விழுக்காடு. இந்த வளர்ச்சி விகிதம், முன்னேறிய நாடுகளுக்கு நிகரானது. இத்தகைய ஒரு நிலையை எட்டுவதற்கு, அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் மிக முக்கிய காரணம்.
எழுத்தறிவு விகிதம் அதிகரிப்பு!
அறிவொளி இயக்கம் என்பது, கள்ளாமை இருள் ஆகட்டும் பணியோடு முடிந்து விடவில்லை. அறிவொளி தீபத்தின் வெளிச்சம், அது சிறப்பாக அமலாக்கம் செய்யப்பட்ட மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் தனது வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது.
அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, இந்திய எழுத்தறிவு விகிதம் பெருமளவு அதிகரித்தது. 1991 ஆம் ஆண்டு 52.1 விழுக்காடாக இருந்த எழுத்தறிவு விகிதம், அறிவொளி இயக்கம் முடியும் போது, 65.4 விழுக்காடாக அதிகரித்து, குறிப்பாக கிராமப்புற எழுத்தறிவு விகிதம், ஏற்கனவே இருந்ததை காட்டிலும், 14.7 விழுக்காடு அதிகரித்தது.
கிராமப்புற பெண்களின் கல்வி விகிதம் 13.5 விழுக்காடு உயர்ந்தது. ஆண் பெண் கற்றல் இடைவெளிகள், பாலின பாகுபாடு, அறிவொளி இயக்க காலகட்டத்தில், கிராமப்புறங்களில் 24.7 விழுக்காடாகக் குறைந்தது.

அறிவொளி இயக்கத்தின் பலனாக, தமிழ்நாட்டில் 10.81% விழுக்காடு எழுத்தறிவு அதிகரித்தது. குறிப்பாக, பெண் கல்வி விகிதம், 13 விழுக்காடு அதிகரித்தது. ஆண்-பெண் எழுத்தறிவு விகித இடைவெளி 17. 8 ஆக குறைந்து உள்ளது.
தற்போதைய நிலையில், இந்தியாவின் மொத்த எழுத்தறிவு விகிதம் 77.7% . தமிழ்நாட்டில் இது 82.9%. இன்னும் ஏழு விழுக்காடு மக்கள் கல்லாதவர்களாகவே நீடிக்கின்றனர். அறிவொளி இயக்கத்திற்குப் பிறகு பல திட்டங்கள் வந்து போனாலும், அறிவொளி இயக்கத்திற்கு நிகரான ஒரு எழுத்தறிவு இயக்கம் இந்தியாவில் முன்னெடுக்கப் படவில்லை.
சர்வதேச எழுத்தறிவு நாள் செப்டம்பர் எட்டாம் தேதி என அனுசரிக்க தொடங்கியது முதல், இன்று வரை, 56 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆயினும் கல்லாமை தொடர்கிறது. கல்லாமையை இல்லாமல் ஆக்கும் வரை சர்வதேச எழுத்தறிவு நாளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும்.
செப்டம்பர் எட்டாம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம்.
கட்டுரையாளர்:
நா.மணி

மேனாள் தலைவர், தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ராமநாதபுரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்