பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சி.ஆர்.பி.எப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். Spying for Pakistan
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில் சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் உதவி துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த டெல்லியைச் சேர்ந்த ஜோதி ராம் ஜாட்டை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு இவர் 2023 முதல் இந்திய ராணுவ தகவல்களை பகிர்ந்து வந்ததும், இதற்காக அவர் பல்வேறு வழிகளில் பணம் பெற்றிருப்பதும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்தநிலையில் அவரை கைது செய்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை ஜூன் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் அவரை பணி நீக்கம் செய்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து இன்று (மே 26) வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து சிஆர்பிஎப் பணியாளர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை நெருக்கமாகக் கண்காணித்ததில், ஒருவர் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டது கண்டறியப்பட்டது. அவர் விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படியும், சிஆர்பிஎப் விதிகளின்படியும் அவர், 21.05.2025 முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
அண்மையில் ஹரியானாவைச் சோ்ந்த பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 4 உளவாளிகள் கைது செய்யப்பட்டனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இதுவரை 10 உளவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. Spying for Pakistan