அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் இன்று (மே 28) சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Anna University student sexual assault case
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆண் நண்பருடன் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு, இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் இருவரையும் மிரட்டி, அந்த ஆண் நண்பரை விரட்டிவிட்டு அம்மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி 100 க்கு போன் செய்து புகார் தெரிவிக்க, இந்த தகவல் கோட்டூர்புரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர் யார் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், ஞானசேகரன் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட போது தொலைபேசியில் ‘சார்’ என்று ஒருவரை அழைத்து பேசியதாகவும் தகவல் வெளியானது.
இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறி அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல. திமுக அனுதாபி தான் என்று விளக்கமளித்திருந்தார்.
இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதோடு ஞானசேகரன் மீது திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து ஞானசேகருக்கு எதிராக 100 பக்க குற்ற பத்திரிக்கையை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த சூழலில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும் ஆதாரம் இல்லாமல் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
அதாவது பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு சாட்சி விசாரணை தொடங்கியது. இதில் மொத்தம் 29 பேர் சாட்சியம் அளித்தனர். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு சார்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மே 20 முதல் 23 வரை இறுதி வாதங்கள் நடைபெற்றன.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் வலுவாக உள்ளது. குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார்.
அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர் குற்றவாளி” என அறிவித்தார். சிறப்பு விசாரணை குழு அறிக்கையை ஏற்று இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி தண்டனை விவரத்தை ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏற்கனவே சென்னை பெருநகர முதலாவது கூடுதல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இட மாறுதல் செய்யப்பட்டார். தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் புதிய பொறுப்பை அவர் ஏற்க உள்ளார்.
ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. Anna University student sexual assault case
