வைஃபை ஆன் செய்ததும், “அலைகள்தான் எப்போதும் ஓய்வதில்லைதானே” என ஏதோ ஒரு கவிதையை வாசித்தது போல மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Soumya Operation KG flops again
” ‘Operation KG’.. ராமதாஸ்- அன்புமணி இடையே கடும் போட்டி! ‘கொட்டி கொடுக்க’ ரெடியாக இருக்கும் சவுமியா!” என்ற தலைப்பில் நமது மின்னம்பலம் இதழில் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியான டிஜிட்டல் திண்ணையில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், “பாமகவை கடுமையாக எதிர்த்து பேசிவரும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியதாம் அன்புமணி அணி.

முதல் கட்டமாக பசுமை தாயகத்தின் காட்டுமன்னார் கோவில் சத்யனிடம், கனலரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாம். மேலும் கனலரசனிடம் பேசும் போது, ‘உங்க குடும்பத்துக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் சொல்லுங்க.. அதை சின்னய்யா அடைத்து விடுவார்.. அதே மாதிரி பாதியில நிற்கிற வீடு கட்டுமானப் பணிகள் முழுமையாக சிறப்பாக முடிக்கிறதுக்கும் சின்னய்யா உதவி செய்வார்.. இது பற்றி நான் பேச விரும்புகிறேன் என்று சொல்லுங்க” என்று சத்யனை தூது அனுப்பினாராம் சவுமியா அன்புமணி.
இந்த கட்டளையை ஏற்று கனலரசனை சத்யன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, ‘சின்னய்யா கையில்தான் இனி பாமக இருக்கும்.. நீங்களும் வந்துட்டா கட்சியில் முக்கியமான பொறுப்பு தருவாங்க.. உங்களோட முழுமையான எதிர்காலத்தையும் சின்னய்யா குடும்பம் பார்த்துக்கும்’ என்று சொல்லிவிட்டு, சவுமியா தந்த வாக்குறுதிகளையும் அடுக்கினாராம்.
ஆனால் இத்தனையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கனலரசன், ‘ஆமா.. எங்களுக்கு கடன் இருந்தது எல்லாம் இதுநாள் வரை அன்புமணிக்கும் சவுமியாவுக்கும் தெரியாமலா இருந்துச்சு? இத்தனை வருஷமா இல்லாம இப்ப எதுக்கு எங்க மேல திடீர்னு இவ்வளவு அக்கறை?’ என கடுப்பாகவே சத்யனிடம் கேட்டிருக்கிறார். அத்துடன், அன்புமணியையோ சவுமியாவையோ சந்திக்க தாம் விரும்பவில்லை எனவும் முகத்தில் அடித்தது போல சத்யனிடம் சொல்லி அனுப்பிவிட்டாராம் கனலரசன். இந்த தகவலை சத்யன், சவுமியாவுக்கு பாஸ் செய்திருக்கிறார்” என குறிப்பிட்டிருந்தோம்.
ஆனாலும் காடுவெட்டி குரு குடும்பத்தை எப்படியாவது அன்புமணி பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற ‘Operation KG ஐ சவுமியா அன்புமணி அவ்வளவு எளிதாக விட்டுவிடவில்லை என்கின்றன பாமக வட்டாரங்கள்.
காடுவெட்டி குரு குடும்பத்தை அன்புமணி அணிக்கு இழுத்து வருவதில் இப்போதும் படுதீவிரமாக இருந்து வருகிறாராம் சவுமியா. இந்த ஆபரேஷனில் அடுத்த கட்டமாக சவுமியா அன்புமணி தேர்வு செய்தது டாக்டர் தமிழரசி என்பவரைத்தான்.

காடுவெட்டி குரு-சொர்ணலதா தம்பதிக்கு திருமணமாகி சில ஆண்டுகள் கழித்துதான் குழந்தைகள் பிறந்தன. காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதாவுக்கு பிரசவம் பார்த்தவர்தான் டாக்டர் தமிழரசி. அத்துடன் காடுவெட்டி குருவின் வாரிசுகளான விருதாம்பிகை மற்றும் கனலரசு ஆகியோருக்கு உதவிகள் செய்வாராம் டாக்டர் தமிழரசி.இதனால் டாக்டர் தமிழரசி மூலம் கனலரசுவை அன்புமணி பக்கம் இழுக்க சவுமியா முயற்சிகளை மேற்கொண்டாராம்.
இது பற்றி நம்மிடம் பேசிய பாமக வட்டாரங்கள், சவுமியாவின் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் ஜூன் 22ஆம் தேதியன்று டாக்டர் தமிழரசி தமது கிளினிக்கில் இருந்து தனக்கு நம்பிக்கையானவரை அனுப்பி ஒரு செல்போனை கனலரசுவிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். அந்த நபரும் கனலரசுவிடம் செல்போனை கொடுக்க, டாக்டர் தமிழரசியிடம் என்ன விவரம் என கேட்டுள்ளார் கனலரசு. அப்போது, “சவுமியா மேடம் உங்கிட்ட நேரடியாக பேசனும்னு சொல்றாங்க.. நான் கொடுத்து அனுப்புன செல்போனுக்கு அவங்க கால் செய்வாங்க.. எடுத்து பேசு” என சொல்லி இருக்கிறார் டாக்டர் தமிழரசி.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களிலேயே கனலரசு கையில் இருந்த செல்போனுக்கு சவுமியா அன்புமணி பேசியிருக்கிறார். அப்போது “நாம ஏம்பா இப்படி பிரிஞ்சு இருக்கனும்.. நாம எல்லாம் ஒற்றுமையா இருக்கனும். எந்தவித மன சஞ்சலமும் சோர்வும் வேண்டாம்.. நீ வந்து சின்னய்யாவை பாரு.. உனக்கு என்ன வேணும்னாலும் சின்னய்யா செஞ்சு தருவாரு.. நீ சென்னைக்கு வந்து சின்னய்யாவை பார்த்து பேசிட்டு போ.. உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் சின்னய்யா தீர்த்து வைப்பார்” என ரொம்பவே உருக்கமாக பேசினாராம் சவுமியா அன்புமணி.
இதை பொறுமையாக கேட்டுக் கொண்ட கனலரசு, “நாங்க தனி இயக்கம்.. தனி பாதைன்னு போயிட்டோம்.. இப்ப நடக்கிறது உங்க குடும்ப பிரச்சனை. உங்க குடும்ப விவகாரத்துல எங்களை இழுத்துவிடாதீங்க.. இதுல நாங்க தலையிடவும் முடியாது.. என்ன இருந்தாலும் என்னை மதித்து பேசியிருக்கீங்க.. உங்களுக்கு ரொம்ப நன்றி” என சொல்லி போனை துண்டித்துவிட்டார் என்கின்றன.
ஆனாலும் சவுமியாவோ, மீண்டும் டாக்டர் தமிழரசியிடம், கனலரசு பேசியதை அப்படியே ஒப்புவித்திருக்கிறார். இதுபற்றி டாக்டர் தமிழரசி மீண்டும் கனலரசுவிடம் பேசிய போது, “அவங்க குடும்ப பிரச்சனையில நாம ஏன் தலையிடனும்? நாமதான் தனியாகவே போயிட்டோம்தானே.. அவங்க சொல்றமாதிரி நாம செய்ய முடியாது” என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
சவுமியாவின் “Operation KG” மீண்டும் தோல்வியைத் தழுவி இருப்பதால் டாக்டர் அன்புமணியின் குடும்பம் படு அப்செட்டில் இருக்கிறதாம் என டைப் செய்துவிட்டு வைண்ட் அப் செய்தது வாட்ஸ் அப். Soumya Operation KG flops again