ரிஷப் பந்த் அபார சதம் : குருவை மிஞ்சிய சிஷ்யன்… குஷியான சச்சின்!

Published On:

| By christopher

sachin lauds rishab pant 7th test century in eng

IND VS ENG : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதத்தை பதிவு செய்தார். sachin lauds rishab pant 7th test century in eng

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் (101) இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சதமடித்த கேப்டன் சுப்மன் கில் (127*) மற்றும் துணை கேப்டன் ரிஷப் பந்த் (65*) களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அதிரடியாக ஆடி வந்த ரிஷப் பந்த் சிக்சர் அடித்து சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார். அப்போது தனது ஸ்டைலில் அவர் அடித்த பல்டி பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த அவர் 134 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனியை முந்திய பந்த்!

எனினும் தனது சதத்தின் மூலம், டெஸ்ட் போட்டியில் அதிக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனியை (6) முந்தினார் ரிஷப் பந்த் (7).

மேலும் ஆசியாவுக்கு வெளியே 4வது முறையாக முதல் இன்னிங்ஸில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால், கில் மற்றும் பந்த் இணைந்துள்ளனர்.

முன்னதாக, ”2002 ஆம் ஆண்டு இதே ஹெடிங்லியில் ராகுல், கங்குலி மற்றும் நான் மூவரும் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தோம். அந்த போட்டியில் வெற்றியும் பெற்றோம். தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்த முறை அந்த மூன்றாவது சதம் யார் அடிப்பார்?” என ஜாம்பவான் சச்சின் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மூன்று பேர் அல்ல, பந்த் மற்றும் கருண் நாயர் ஆகியோர் என நான்கு பேர் முதல் இன்னிங்ஸில் சதமடிப்பர் என கங்குலி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சச்சினின் ஆசையையும், கங்குலியின் நம்பிக்கையையும் மெய்பிக்கும் விதமாக ரிஷப் பந்த் அபாரமாக சதமடித்து அசத்தினார்.

இதுதொடர்பாக சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், ”சதமடித்த ரிஷப்பின் கொண்டாட்டம் அவரது பேட்டிங்கைப் போலவே சுவாரஸ்யமாக இருக்கிறது!” என மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “பஷீரின் ஸ்பெல்லின் போது சுவாரஸ்யமான ஒன்றையும் கவனித்தேன். சுப்மனும் ரிஷப்பும் பந்து வீச்சுகளுக்கு இடையில் இந்தியில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இது வெறும் சாதாரண பேச்சு அல்ல. அவர்கள் பந்து வீச்சாளருடன் உளவியலாக விளையாடி, அவரது தாளத்தை சீர்குலைக்க முயன்றனர். இந்த சிறிய விவரங்கள் ஸ்கோர்போர்டில் தோன்றாமல் போகலாம், ஆனால் அவை ஆட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” எனப் பாராட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share