பிரதமர் மோடி தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அதன் வரலாற்றையும் சித்தாந்தத்தையும் விவரித்தார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: என் மனம்நிறை நாட்டுமக்களே, அடுத்த சில நாட்களில் நாம் விஜயதசமியைக் கொண்டாட இருக்கிறோம். இந்த முறை விஜயதசமி, மேலும் ஒரு விஷயம் காரணமாக மிகவும் விசேஷம் நிறைந்தது. இந்த நாளன்று தான் ராஷ்ட்ரீய சுயம்சேவவக சங்கம் 100 ஆண்டுகள் முன்பாக நிறுவப்பட்டது. ஒரு நூற்றாண்டின் இந்தப் பயணம் எத்தனை அற்புதமானது, வரலாறு காணாதது, உத்வேகம் அளிக்கவல்லது..
ஆர்.எஸ்.எஸ். பின்னணி
இந்த நாளிலிருந்து 100 ஆண்டுகள் முன்பாக, ராஷ்ட்ரீய சுயம்சேவக சங்கம் நிறுவப்பட்ட போது, தேசம் பலநூற்றாண்டுக்கால அடிமைத்தளைகளில் சிக்கியிருந்தது. இந்த பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான அடிமைத்தனம் காரணமாக, நமது சுயமரியாதைக்கும், தன்னம்பிக்கைக்கும் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏன் உருவானது?
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம், தனது அடையாளத்தைத் தொலைத்து விட்டுத் அதைத் தேடுவதில் தவித்துக் கொண்டிருந்தது. நாட்டுமக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகியிருந்தார்கள். ஆகையால் தேசத்தின் விடுதலையோடு கூடவே, தேசத்தின் கருத்தியல் அடிமைத்தனத்தனத்திலிருந்தும் விடுதலை பெற்றாக வேண்டியது மிக மகத்துவமானதாக இருந்தது. இந்த நிலையில்தான், பெருமதிப்பிற்குரிய டாக்டர். ஹெட்கேவார் அவர்கள், இந்த விஷயம் குறித்து ஆழமாக ஆலோசித்த பிறகு, இந்த பகீரதப் பணியை நிறைவேற்றும் பொருட்டு, அவர் 1925ஆம் ஆண்டு, விஜயதசமி நன்னாளில் ராஷ்ட்ரீய சுயம்சேவக சங்கத்தை நிறுவினார்.
கோல்வால்கர் சித்தாந்தம்
டாக்டர் ஐயா காலமான பிறகு, பெருமதிப்பிற்குரிய குருஜி அவர்கள், தேச சேவையின் இந்த மகா வேள்வியை முன்னெடுத்துச் சென்றார். பெருமதிப்பிற்குரிய குருஜி கூறுவதுண்டு – ராஷ்ட்ராய ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ராய இதம் ந மம, அதாவது, இது என்னுடையது அல்ல, இது தேசத்தினுடையது என்று. இதிலே சுயநலத்திற்கு அப்பாற்பட்டு, தேசத்திற்காக அர்ப்பணிக்கும் உணர்வினை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான உள்ளெழுச்சி அடங்கியிருக்கிறது. குருஜி கோல்வால்கர் அவர்களின் இந்த வாக்கியம் தான், இலட்சக்கணக்கான சுயம்சேவகர்களுக்கு, தியாகம் மற்றும் சேவையின் பாதையைக் காட்டியது. தியாகம் மற்றும் சேவையின் இந்த உணர்வும், ஒழுக்கப் பாடமும் தான், சங்கத்தின் மெய்யான பலம். இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 100 ஆண்டுகளாக, களைப்படையாமல், தடைப்படாமல், தேச சேவையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகையால் தான், தேசத்தில் எங்கே இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் சுயம்சேவர்கள் அனைவருக்கும் முன்னதாக அங்கே சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
தேசத்துக்கே முதன்மை
இலட்சோபலட்சம் சுயம்சேவகர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும், தேசத்துக்கே முதன்மை என்ற இந்த உணர்வு தான் எப்போதும் முதன்மையானதாக இருக்கிறது. தேசச் சேவை என்ற மாபெரும் வேள்வியிலே, தங்களைத் தாங்களே அர்ப்பணம் செய்து வரும் ஒவ்வொரு சுயம்சேவகருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் அர்ப்பணம் செய்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.