பிரபலமான நிதித் தொழில்நுட்ப (fintech) நிறுவனமான Razorpay தனது பங்கு வெளியீட்டிற்கான (IPO) வரைவு ஆவணங்களைச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI-யிடம் சமர்ப்பித்துள்ளது. Razorpay-யின் IPO-வின் மதிப்பு ரூ. 5,000 முதல் ரூ. 6,000 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்களன்று வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில், “முன்மொழியப்பட்ட IPO தொடர்பாகத் தனது பங்குச் சான்றுகளுக்கான வரைவு ஆவணங்களை SEBI மற்றும் பங்குச் சந்தைகளிடம் சமர்ப்பித்துள்ளதாக” அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பொது அறிவிப்பில் வெளியீட்டின் அளவை Razorpay வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், அந்நிறுவனம் தனது IPO மூலம் ரூ.5,000 முதல் ரூ.6,000 கோடி வரை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Razorpay நிறுவனம் 2014ஆம் ஆண்டில் ஹர்ஷில் மாத்தூர் மற்றும் ஷஷாங்க் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் ஒருங்கிணைந்த தளம் (platform) மூலம் கட்டண அங்கீகாரம், கட்டண விநியோகம், வங்கிச் சேவைகள், ஊதிய நிர்வாகம் (payroll), கடன்கள் மற்றும் பிற நிதிச் சேவைகளை வழங்குகிறது.
தொடக்க நிலை நிறுவனங்கள் (startups), நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் பெரிய நிறுவனங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வணிகங்களுக்கு Razorpay சேவைகளை வழங்கி வருகிறது. இது 2020ஆம் ஆண்டில் ‘யூனிகார்ன்’ (unicorn) அந்தஸ்தை எட்டியது. அப்போது முதல் கட்டணச் சேவைகளைத் தாண்டி, பரந்த நிதிச் சேவைச் சூழல் அமைப்பாகத் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. Razorpay-யின் IPO இறுதி அளவு, மதிப்பீடு மற்றும் தேதி ஆகியவை SEBI-யின் ஒப்புதல், சந்தை நிலவரங்கள் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து அமையும்.
ரகசியமாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறையின் கீழ், நிறுவனங்கள் தங்கள் வரைவு ஆவணங்களை ஆய்வுக்காக SEBI-யிடம் சமர்ப்பிக்கலாம். அதேவேளையில் அனைத்து வணிகத் தகவல்களையும் உடனடியாக வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி Razorpay-யின் போட்டியாளரான PhonePe தனது IPO திட்டங்களை ஒத்திவைத்துள்ள நிலையில், Razorpay-யின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
