தேனிலவு கொலையில் அடுத்தடுத்து ட்விஸ்ட் : சோனம் தான் கொலையாளி – 17 நாட்களுக்கு பிறகு வெளிவந்த பகீர் உண்மை!

Published On:

| By christopher

raja raghuvanshi murder case get openup afer 17 days

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கும், சோனம் என்பவருக்கும் கடந்த மே 11ஆம் தேதி திருமணம் நடந்தது.

இதனையடுத்து மே 20ஆம் தேதி புதுமண தம்பதி இருவரும் மேகலாயாவின் ஷில்லாங்கிற்கு தேனிலவு பயணம் சென்றனர். எனினும் அடுத்த மூன்று நாட்களில் 23ஆம் தேதி அவர்கள் மாயமானதாக டூரிஸ்ட் கைடு புகார் அளித்ததை தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் ஷில்லாங் காவல்துறை தீவிரம் காட்டியது.

அதன்பின்னர் ஜூன் 2ஆம் தேதி ஷில்லாங்கில் வெய் சாவ்டாங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு 200 அடி ஆழமான பள்ளத்தாக்கில் ராஜாவின் சிதைந்த உடலை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது முகம் சிதைந்திருந்ததால், அவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் அவரது கையில் “ராஜா” என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்ட போலீசார், அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்டு அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில் அவரது உடலில் பல கூர்மையான காயங்கள் குறிப்பாக அவரது தலையின் முன்பக்கத்திலும், பின்புறத்திலும் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன்மூலம் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

ராஜாவின் கொடூர கொலையும், மனைவி சோனம் மாயமானதும் விவாதமானதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 7ஆம் தேதி மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சிபிஐ விசாரணை கோரினார்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சோனம் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, ஷில்லாங்கில் இருந்து 2100 கி.மீ தொலைவில் உத்தரபிரதேசத்தின் காசிப்பூரில் உள்ள சாலையோர உணவக உரிமையாளரின் மொபைல் போனைப் பயன்படுத்தி தனது சகோதரர் கோவிந்தை தொடர்பு கொண்டு இருப்பிடத்தை தெரிவித்தார். கோவிந்த் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சோனமை கைது செய்து நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

அதன் அடிப்படையில் சோனமின் தந்தையின் பிளைவுட் தொழிற்சாலையில் பணிபுரியும் அவரது காதலர் ராஜ் குஷ்வாஹா (வயது 20) மற்றும் கொலை கூட்டாளிகள் உத்தரபிரதேசத்தின் லலித்பூரைச் சேர்ந்த ஆகாஷ் ராஜ்புத், ம்த்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த விஷால் சவுகான் மற்றும் ஆனந்த் குர்மி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களை உத்தரபிரதேசத்தில் இருந்து ஷில்லாங் அழைத்து செல்வதற்கான 7 நாள் போக்குவரத்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சோனமிடம் போலீசார் தொடர்ந்து நடத்தி வரும் விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ராஜ் குஷ்வாஹாவை காதலித்து வந்த சோனம், குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் ராஜாவை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகும் காதலருடன் போனில் தொடர்பு கொண்டிருந்த அவர், ’ராஜா தன்னை நெருங்குவது பிடிக்கவில்லை என்றும், அவரிடம் விலகியே இருப்பதாகவும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மேலும் திருமணமான சில நாட்களுக்குப் பிறகு தனது கணவரைக் கொல்லத் திட்டமிட்டதும், அதற்காக கூலிப்படையினரை ஒப்பந்தம் செய்ததும், கொலை செய்யவே ஹனிமூன் என்ற பெயரில் மேகலாயா சென்றதும் சோனமின் மொபைல் குறுஞ்செய்தி மூலம் உறுதியானதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

7 நாட்களில் தயாரான கொலைத் திட்டம்!

இந்தூர் கூடுதல் காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோதியா இதுதொடர்பாக கூறுகையில், ”திருமணத்திற்கு பிறகு மே 18-ஆம் தேதி சோனம் தனது காதலர் ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்கு மறுநாள் மே 19 அன்று மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் செல்லலாம் என கணவரிடம் கோரிக்கை வைத்தார். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அன்று இரவில் தனது காதலர் ராஜிடம் கொலை திட்டம் குறித்து சுமார் 6 மணிநேரம் போனில் பேசியுள்ளார்.

இதுகுறித்து எதுவுமே அறியாத அப்பாவி கணவர் ராஜா, மே 20ஆம் தேதி அங்கிருந்து மனைவி சோனமுடன் மேகலாயா புறப்பட்டு சென்றார்.

அவர்களை பின் தொடர்ந்து கூலிப்படையினர் மூவரும் ஷில்லாங் சென்று சோனமும் ராஜாவும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினர்.

”அவனை கொல்லுங்க” – கத்திய சோனம்

தேனிலவின் மூன்றாவது நாளில் மே 23 அன்று, சோனம் ஒரு போட்டோஷூட் என்ற சாக்கில் ராஜாவை ஒரு மலைப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்றார். கொலையாளிகள் மூன்று பேரும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். ஓரிடத்தில் சோனம் சோர்வாக இருப்பது போல் நடித்து, தனது கணவர் மற்றும் கொலையாளிகளுக்குப் பின்னால் நடக்கத் தொடங்கினார். யாருமே இல்லாத ஒரு இடத்தை அடைந்ததும், ’அவரை கொல்லுங்கள்’ என்று கத்தி, கூலிப்படையினர் மூலம் ராஜாவை தீர்த்துக்கட்டினார்.

அதுவரை சோனமின் திட்டத்தின்படி எல்லாம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கோடாரி தான் ராஜாவின் கொலையில் எங்களுக்கு முதல் துப்பாக கிடைத்தது.

இந்த வகையான கோடாரி இப்பகுதியில் பொதுவாக யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே இந்த நிலையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம். அதன் பின்னரே தம்பதியினரின் செல்போன் அழைப்பு பதிவுகளை விசாரிக்க முடிவு செய்தோம்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share