பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது ராகுல் காந்தியின் பிரச்சாரம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மகாகத்பந்தன் (RJD + JD(U) + Congress) கூட்டணியில் இருந்தது. இதில் காங்கிரஸ் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 27 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதேபோல் கடந்த 2020ம் ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தலின் போது அதே மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்தது. இதில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் வெறும் 19 இடங்களே வென்றது. இது கூட்டணி கட்சிகளுக்குள்ளும் பெரிய விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள பிகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 61 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.
இன்று காலை தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
காலை 10மணி நிலவரப்படி தனிப்பெரும் கட்சியாக ஜேடியூவும் பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. லாலு பிரசாத் கட்சியின் ஆர்ஜேடி தற்போது 3-வது இடத்தில் உள்ளது.
இதில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 18 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் முன்னிலை பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது.
பீகாரில் தேர்தலுக்கு முன்பாக நடந்த SIR நடவடிக்கையில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை எதிர்த்தார். தொடர்ச்சியாக தேஜஸ்வி யாதவுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டார்.
மேலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலில்களில் ஓட்டு திருட்டு நடந்திருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பெகுசராயில் உள்ள ஒரு குளத்தின் குதித்து நீச்சலிடித்து மக்களை அணுக முயன்றார்.
ஆனால் ராகுல் காந்தியின் பிரச்சார திட்டங்கள் எதுவும் மக்களிடையே பெரிதாக சென்று சேரவில்லை என்பதையே வாக்கு எண்ணிக்கை நிலவரம் காட்டுகிறது.
